தமிழகத்தில் இன்று
தமிழகத்தில் விரைவில் 5.5 லட்சம் தொலைபேசி இணைப்புகள்
கோவை:
தமிழகத்தில் மேலும் 5.5 லட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படும். இதில் கோவை நகரில் மட்டும் 75 ஆயிரம் இணைப்புகள்வழங்கப்படவுள்ளது என தமிழ்நாடு தொலைத் தொடர்புத் துறை முதன்மை பொது மேலாளர் முகமது யாசின் தெரிவித்தார்.
கோவையில் வியாழக்கிழமை புதிய டைரக்டரி வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் புதிய டைரக்டரியை முகமது யாசின் வெளியிட, அதை கோவைமாநகர போலீஸ் துணைகமிஷனர் டேவிட்சன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கோவை தொலைத் தொடர்புத் துறை பொது மேலாளர் ஸ்ரீதர் மற்றும் வெங்கடேசன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ராஜ்குமார், எம்.
என் பப்ளிகேஷன்ஸ் நிதிக் கட்டுப்பாட்டாளர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு பின்னர் முகமது யாசின் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாக 5.5 லட்சம் புதிய இணைப்புகள் விரைவில் வழங்கப்படும். இதில் கோவை மாவட்டத்திற்கு 75 ஆயிரம் இணைப்புகள் கிடைக்கும்.
தமிழகத்தில் விரைவில் செல்லுலார் போன் சர்வீஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும். கோவை, சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் முதல்கட்டமாக ஆயிரம் செல்லுலார் போன் வழங்கப்படும்.
இந்த தொலைபேசி "இந்தியன் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன் சர்வீஸ் என அழைக்கப்படும். தொலைபேசித் துறையே இதற்கான கருவிகளைவழங்கும் என்று முகமது யாசின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications