தமிழகத்தில் இன்று
ஜூ-ன்03, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
2. சரஸ்வதி வணக்கம்
வெள்ளைக் கமலத்திலே - அவள்
வீற்றிருப்பாள், புக ழேற்றிருப்பாள்,
கொள்ளைக் கனியிசை தான் -நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள் ,
கள்ளைக் கடலமு தை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவிசொல வே
பிள்ளைப் பருவத்திலே - எனைப்
பேணவந் தாளருள் பூணவந்தாள் (3)
வேதத் திருவிழியான் - அதில்
மிக்கபல் லுரையெனுங் கருமையிட் டாள்,
சீதக் கதிர்மதியே - நுதல்
சிந்தனையே குழ லென்றுடை யாள்,
வாதத் தருக்க மெனுஞ் - செவி
வாய்ந்ததற் றுணி வெனுந் தோடணிந்தாள்,
போதமென் நாசியி னாள் - நலம்
பொங்கு பல்சாத்திர வாயுடையாள் (4)
கற்பனைத் தேனிதழாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையி னாள்
சிற்ப முதற்கலை கள் - பல
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப் பாள்
சொற்படு நயமறி வார் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறி வார்
விற்பனைத் தமிழ்ப்புல வோர் - அந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத் தாள் (5)
வாணியைச் சரண்புகுந்தேன் - அருள்
வாக்களிப் பாளெனத் திடமிகுந்தேன்
பேணிய பெருந்தவத் தாள் - நிலம்
பெயரள வும்பெயர் பெயரா தாள்
பூணியல் மார்பகத் தாள் - ஐவர்
பூவை, திரெளபதி புகழ்க் கதையை
மாணியல் தமிழ்ப்பாட்டால் - நான்
வகுத்திடக் கலைமகள் வாழ்த்துக வே! (6)