தமிழகத்தில் இன்று
ஆட்சியைப் பிடிக்க...காளி கோவிலில்...நள்ளிரவில்...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தஞ்சை:
தஞ்சை மாவட்டம், திருநாகேஸ்வரத்தையடுத்துள்ள அய்யாவாடி வக்கிரகாளியம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரதுஉயிர்த்தோழி சசிகலா ஆகியோர் சிறப்புப் பூஜை நடத்தினார்கள்.
தமிழகத்தில் வக்கிரகாளியம்மன் கோவில் உள்ள ஒரே இடம் அய்யாவாடிதான். அங்குள்ள வக்கிரகாளியம்மன் கோவிலில் பிரச்சித்தமானது. இந்தக்கோவிலில் சிம்ம முகத்தோடு, 18 திருக்கரங்களோடு வக்கிரகாளியம்மன் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளர்ணமி அன்று நள்ளிரவு 11 மணி முதல் 2 மணி வரை விசேஷ பூஜை நடக்கும்.
இந்தக் கோவிலின் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த பூஜையில் ஜெயலலிதா அவரது உயிர்த்தோழி சசிகலா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இவர்களுடன் சசிகலாவின் அண்ணன் வினோதகன், மகன்கள் மகாதேவன், தங்கமணி ஆகியோரும் வந்திருந்தனர்.
அங்கு சென்ற ஜெயலலிதாவுக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. உள்ளே சென்ற அவர் நாற்காலியில் அமர்ந்து மனம் உருக வேண்டிக்கொண்டார்.
பின்னர் ஜெயலலிதா சார்பில் 96 திரவியங்களும், விசேஷ பழங்களும், செளபாக்கிய திரவியங்களும் போடப்பட்டது. விசேஷ ஹோமமும் நடத்தப்பட்டது.அம்பாளுக்கு மஞ்சள் நிற பட்டுப்புடவை சாத்தினார். ஜெயலலிதாவின் பூஜை யாகத்தை 10 பூஜாரிகள் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஜெயலலிதா தஞ்சைபுறப்பட்டுச் சென்றார்.
ஜெயலலிதா கோவிலுக்கு வந்தால் வழக்கம்போல் பக்தர்களிடம் கெடுபிடி அதிகமானது. யாகத்தை முடித்துக் கொண்டு ஜெயலலிதா செல்லும்வரையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்தனர்.
சுதாகரனும் வந்தார்:
ஜெயலலிதாவின் சிறப்பு பூஜையில் அவரது மாஜி வளர்ப்பு சுதாகரனும் கலந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதா வருவதற்கு அரைமணிநேரத்துக்கு முன்பேஅவர் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு போய்விட்டார்.
இந்தக் கோவிலில் பூஜை செய்தால் குடும்பத்தில் உள்ள கிரக கோளாறுகள் அகலும். பில்லி, சூனியம், செய்வினைகள் பறந்தோடும். பல நூறுஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கை இது. அதுமட்டுமல்ல. இழந்ததை மீட்கலாம். இதற்கு உதாரணமும் உண்டு.
கவுரவர்களிடம் இழந்த ஆட்சியை மீண்டும் அடைய பஞ்சபாண்டவர்கள் இந்தக் கோவிலில்தான் யாகம் செய்தனர். அதன் பலனையும் அடைந்தனர். அதேநம்பிக்கையில் தற்போது ஜெயலலிதா யாகம், பூஜை நடத்தி தமிழகத்தில் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கிறார் என்று அங்குள்ள மக்கள்பேசிக்கொண்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜெயலலிதா தஞ்சையிலுள்ள சூரியனார் கோவிலில் பூஜை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.