தமிழகத்தில் இன்று
இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
லாரி மோதியதால் சேதமடைந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு வழங்க மறுத்த இன்ஷூரன்ஸ் நிறுவன அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அலமேலு ரங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சகோதரர்கள் ராமசாமி,நடராஜ், ஞானமூர்த்தி,பரசுராமன் (45) ஆகியோர்.
இவர்களது பூர்வீக வீட்டின் மீது கடந்த 15.3.1994 அன்று லாரி மோதியது. இரண்டு லாரிகள் ஒன்றுடன் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஒருலாரி இவர்களது வீட்டை இடித்துச் சின்னாபின்னமாக்கியது. இதில் வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் நொறுங்கின.
இதையடுத்து நஷ்ட ஈடு கேட்டு நான்கு பேரும் கூட்டாக வழக்குத் தொடர்ந்தனர். 1.12.1994 அன்று வேலூர் சார்பு நீதிமன்றம், 55 ஆயிரம் ரூபாய் -நஷ்டஈட்டுத் தொகையை 12 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும் என்று யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. 8வாரத்திற்குள் இத்தொகையை மனுதாரர்களுக்கு தந்து விட வேண்டும் என்றும் கெடு விதித்தது.
ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் தீர்ப்பைக் கண்டு கொள்ளவேயில்லை. உடனே அதே நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கை நால்வரும் தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துமாறு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தர்மராஜ்,இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகச் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இன்ஷூரன்ஸ் நிறுவன மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத காரணத்தால், அந்நிறுவன அலுவலகத்தில் உள்ள அசையாச் சொத்துக்களான15 அலமாரிகள், 30 நாற்காலிகள், 5 தட்டச்சுப்பொறிகள், 50 டியூப் லைட்கள், 2 குளிர் சாதன கருவிகள் (ஏ.சி. மெஷின்), 2 ரெப்ரிஜிரேட்டர்கள்ஆகியவற்றை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications