தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கே: மனிதாபிமான அடிப்படையில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் படிக்க த.மா.கா. நிதி உதவி அளித்துள்ளது பற்றி...?

ப: சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமாகச் செயல்பட்டு, குடும்பத்தை நிர்கதியாக விட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்: அவர்களில் இந்தஒரு குடும்பத்துக்கு மட்டும் கருணை என்று த.மா.கா. முடிவு செய்திருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அது என்ன காரணம் என்றுஎனக்குத் தெரியவில்லை.

கே: உள்துறை அமைச்சர் அத்வானி, ஈரோட்டில் நடத்திய ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டது பற்றி தங்கள் கருத்து...?

ப: தவறு என்று நினைக்கிறேன்.

கே; மேதாவித்தனமானவர்கள் மட்டுமே துக்ளக் படிப்பார்கள் என்று என் நண்பன் கூறினான் உண்மையா...?

ப:அவர் சொன்னது துக்ளக் படிப்பவர்களைப் பற்றித்தான். எழுதுபவர்களைப் பற்றி அல்ல என்பதால் - ஒரு வேளை உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்.

கே: மன்னிக்கவும்! சோம்பேறி, சோப்ளாங்கி, சோமாறி - இவற்றிலிருந்து உங்கள் சோ எப்படி வேறுபடுகிறது?

ப: சோ ஆரம்பம்; "ம்பேறி", "ப்ளாங்கி", "மாறி"... இவையெல்லாம் இனிமேல்தான் வந்து சேர வேண்டும். ஆகையால், எனது நிலை தொடக்க நிலை.

கே: மரணத்துக்குப் பின், உயிர் எங்கே செல்கிறது? என்ன ஆகிறது?

ப: நீங்கள் நசிகேதஸும் அல்ல; நான் எமதர்மனும் அல்ல.

கே: தப்பு செய்த அனைவரும் அதற்குரிய தண்டனையை அனுபவிக்கிறார்களா...?

ப: கிடையாது. தப்பு செய்த மற்றவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிற நிலையில் உள்ள, தப்பு செய்தவர்களும் உண்டு.

கே: ராம் விலாஸ் பாஸ்வான் வனத்துறை அமைச்சராகியிருந்தால்...?

ப: காட்டிலாகா ஊழியர்களுக்கு, மரங்கள் இனாமாகத் தரப்பட்டிருக்கும். சந்தனக் காட்டு ஊழியர்கள், வீரப்பனின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.

கே: பா.ஜ.க.வின் மதச்சார்பின்மை கொள்கை; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் மதச்சார்பின்மை கொள்கை - வித்தியாசம் என்ன?

ப: ஹிந்துக்களிடையே உள்ள சகல ஜாதிகளின் ஓட்டும் தனக்கே வர வேண்டும் என்று இலக்கு வைத்து செயல்படுவது - பா.ஜ.க. வின்மதச்சார்பின்மை; ஹிந்துக்களில் சில ஜாதிகளின் ஓட்டும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த ஓட்டும் தனக்கே வர வேண்டும் என்று இலக்குவைத்து செயல்படுவது - காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மதச்சார்பின்மை.

கே: கருணாநிதி - ஜெயலலிதா ஆகிய இருவரின் சொத்துச் சண்டையின் முடிவு எப்படியிருக்கும் என்று கருதுகிறீர்கள்?

ப: எப்பொழுதும் போல, சொத்து அவர்களுடையதாக இருக்கும். சண்டை இரு கட்சிகளின் தொண்டர்களுடையதாக இருக்கும்.

கே: 2006-ல் துக்ளக் ஆட்சி அமைய நாம் இருவரும் சேர்ந்து பாடுபடுவோமா?

ப: வேண்டாம். தேவையே இல்லை. அதை மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

கே: ஆந்திர மாநிலத்தில் கிறிஸ்துவ கல்லறைகளை வன்முறையாளர்கள் இடித்துத் தள்ளியுள்ளனரே?

ப: கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கப்படுவதும், பாதிரிமார்கள் தாக்கப்படுவதும் ஆங்காங்கே, அவ்வப்போது நிகழந்து கொண்டே இருக்கின்றன.

அரசு சொல்கிற மாதிரி இது பாகிஸ்தானில் உளவாளிகளின் செயலாக இருந்தாலும் சரி - அல்லது எதிர்க் கட்சிகள் கூறுகிற மாதிரி, ஹிந்துஅமைப்புகளின் செயலாக இருந்தாலும் சரி - இந்த அநாகரிகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

ஒரு சில சம்பவங்கள்தான் நடக்கின்றன என்று கூறி அரசு மெத்தனம் காட்டுவது விபரீதத்தில் போய் முடியும்.

கே: ஜெயலலிதா, தேர்தலில் போட்டியிட தடை வர வாய்ப்புகள் உண்டா?

ப: தடை வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. வருகிற தடை விலகி நிற்பதற்கும் வாய்ப்பு உண்டு.

கே: நடப்பதெல்லாம் கடவுள் செயல் எனும்போது, நடக்கின்ற அநியாய, அக்கிரமங்களுக்கு மற்றவர்களைக் குறை சொல்வது சரிதானா?

ப: அப்படி குறை சொல்பவர்களின் பேச்சும் கடவுள் செயலே. அதில் குற்றம் காணும் உங்களுடைய கேள்வியும் கடவுள் செயலே. இதை விளக்குகிற எனது பதிலும் கடவுள் செயலே.

கே: ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசியபடி நடக்குமா?

ப: கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி சம்மதிக்கிறாரோ இல்லையோ - ஜெயலலிதா சம்மதிப்பதற்கு வாய்ப்பு இருப்பவதாகவே நினைக்கிறேன்.

கே: இத்தனை வழக்குகள் தன் மீது இருந்தும், எந்த தைரியத்தில் மீண்டும் தன் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயலலிதா பேசுகிறார்?

ப: ஆளும் கட்சி பற்றி மக்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிற ஏமாற்றம், தனக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.

கே: அவன் பெரிய மனிதன் என்கிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?

ப: அவனோடு நமக்கு சரிப்பட்டு வராது - என்று அர்த்தம்.

கே: வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ப்ளஸ் பாயிண்ட்களாக இருக்கப் போவது என்ன?

ப: தி.மு.க.வுக்கு ப்ளஸ் பாயிண்ட் - அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி மக்களுக்கு மிச்சம் மீதி இருக்கும் நினைவு. அ.தி.மு.க.வுக்கு ப்ளஸ் பாயிண்ட் - தி.மு.க.ஆட்சி பற்றி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அதிருப்தி.

கே: பத்திரிக்கைகளுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை வழங்கப்பட்டால்...?

ப: வேண்டாம், பாகிஸ்தான் உளவு ஏஜெண்டுகளுக்கும் ஐ.எஸ்.ஐ. என்றுதான் பெயர். இந்த முத்திரை பெறுவது பத்திரிக்கைகளுக்கு தர்மசங்கடமாகஇருக்கும்.

கே: பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால், அதை ஆதரிக்க த.மா.கா. தயார் என்று மூப்பனார்கூறியுள்ளாரே?

ப: பத்திரிக்கையாளர்களிடம் அவர் ஏமாறவில்லை. ஏமாந்த மாதிரி நடிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+