தமிழகத்தில் இன்று
மாடு விவகாரம்: நீதிமன்றத்தில் சரணடைந்தார் தாமரைக்கனி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
இறைச்சிக்காக கேரளத்துக்குக் மாடுகளைக் கடத்திச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தியது தொடர்பான வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏதாமரைக்கனி, நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கேரளத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதாக தாமரைக்கனிக்குத் தகவல் வந்தது. அதன்படி கடந்த ஜூலை 7-ம் தேதி மாடுகளை ஏற்றிச் சென்றலாரியை ஆட்டோவில் துரத்திச் சென்று மடக்கினார் தாமரைக்கனி.
ஆனால், லாரி மோதியதில் ஆட்டோ கவிழ்ந்தது. அதில் இருந்த தாமரைக்கனி காயமின்றித் தப்பினார். ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த தாமரைக்கனிதன்னை அரிவாளால் வெட்டிவிடுவதாக மிரட்டினார் என்று போலீஸில் லாரி டிரைவர் புகார் கொடுத்தார்.
அப் புகாரின்பேரில் தாமரைக்கனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் தாமரைக்கனி.
மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி வேணுகோபால், ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் தாமரைக்கனி சரணடைய வேண்டும் என்றும், தலா ரூ. 20ஆயிரத்துக்கு இரு நபர் ஜாமீன் தந்தால் ஜாமீன் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் தாமரைக்கனி வியாழக்கிழமை சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.