தமிழகத்தில் இன்று
பாகிஸ்தானுடன் பேச்சு சாத்தியமே இல்லை என்கிறார் ஜஸ்வந்த் சிங்
டெல்லி:
ஜம்மு-காஷ்மீர் எல்லையில், தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. எனவே அந்நாட்டுடன் பேச்சுநடத்துவதற்கான சாத்தியமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பேசலாம் என்பதை ஏற்கமுடியாது. ஒருபக்கம் பேச்சு நடத்திக் கொண்டு, மறுபக்கம், தீவிரவாதத்தைத் தூண்டி விடுவது நல்லதாக இல்லை.
எல்லையைக் கடந்து தீவிரவாதத்தைத் தூண்டுவது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறியதாகவே அர்த்தம் கொள்ளப்படும். எனவே அவர்கள்முதலில் எல்லை தாண்டுவதை நிறுத்த வேண்டும். அதன் பிறகுதான் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்க முடியும்.
உலகிலேயே முஸ்லீம்கள் வசிக்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது. அதற்குப் பதிலாக இந்தியா மீது புனிதப் போர்தொடுக்க அது தயாராகி வருகிறது. இந்த திட்டத்தை முதலில் பாகிஸ்தான் கைவிட வேண்டும். அவர்களது கொள்கையை முற்றிலும் மாற்றிக் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கு எதிரான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்.
அரபு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பாரம்பரியமானது. கலாசாரம், மொழி, மக்கள் என அனைத்துத் தரப்பிலும் வரலாற்றுஒற்றுமை வாய்ந்தது. எனது சமீபத்திய இஸ்ரேல் பயணத்தால், அரபு நாடுகளுடனான இந்தியாவின் உறவு பாதிக்காது என்றார் ஜஸ்வந்த் சிங்.
ஐ.ஏ.என்.எஸ்.