தமிழகத்தில் இன்று
ரூபாய்க்கு நேரம் சரியில்லை
டெல்லி:
இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறைந்து வருவதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் தனஞ்செய குமார் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதில்:
கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பு குறைந்து வருகிறது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாத நிலவரப்படி இந்திய ரூபாயின் வாங்கும்மதிப்பு 22.83 பைசாவாகும்.
1998-ல் இது 26.11 பைசாவாகவும், 1999-ல் 24.10 பைசாவாகவும், இப்போது 22.83 பைசாவாகவும் உள்ளது. அதே போல் பெருநகரங்களில் இந்திய ரூபாயின் வாங்கும் மதிப்பும் வெவ்வேறு வகையில் உள்ளது.
டெல்லியில் 19.34 பைசாவாகவும், மும்பையில் 19.96 பைசாவாகவும், சென்னையில் 21.14 பைசாவாகவும், கல்கத்தாவில் 23.04 பைசாவாகவும்,பெங்களூரில் 23.70 பைசாவாகவும் உள்ளது.
தற்போது மத்திய அரசிடமுள்ள வெளிநாட்டு கரன்சியின் கையிருப்பு நடப்பு ஆண்டில் ஜூன் மாதக் கணக்குப்படி ரூ.162 கோடியாக உள்ளது. இதுவும் நடப்பு ஆண்டில்ஏப்ரல் மாதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது.
விரைவில் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் போலியாக தயாரிக்க முடியாத வகையிலும் இந்த நோட்டுகள் தயாரிக்கப்படும் என்றார் தனஞ்செய குமார்.
யு.என்.ஐ.