இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வங்கதேசம் ஆர்வம்
டெல்லி:
இந்தியா, வங்கதேச உறவு மேலும் வலுப்படும் என்று வங்கதேசம் அறிவித்துள்ளது.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சிறப்புத் தூதராக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷபி சமி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தார்.
டெல்லியில் அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் லலித் மான்சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் ஷபி செய்தியாளர்களிடம் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக இந்தியா ஹிஸ்புல் முஜாஹீதீன் தீவிரவாத அமைப்புடன்பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
பயங்கரவாதத்தை ஒடுக்கியே தீர வேண்டும் என்ற இந்தியாவின் கொள்கை பாராட்டத்தக்கது. எனது இந்திய வரவினால் இந்தியாவுக்கும்,வங்கதேசத்துக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்படும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப்பேசினேன். சார்க் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் லலித்மான்சிங்கிடம் விரிவாக விவாதித்தேன். சார்க் அமைப்பின் செயல்பாடுகளில் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் மிகுந்த ஈடுபாடு உள்ளது.
தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்தியா எடுத்துள்ள அனைத்து முயற்சியும் பாராட்டுக்குரியது என்றார் ஷபி.
முன்னதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அனுப்பியுள்ள விசேஷ செய்தி அடங்கிய கடிதத்தை பிரதமர் வாஜ்பாயிடம் கொடுத்தார் ஷபி.
இந்தியா-வங்கதேசத்துக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்க வேண்டும், அகர்தலா- டாக்காவுக்கிடையே பஸ் போக்குவரத்தை அறிமுகப்படுத்தவேண்டும், அகர்தலா -அஹோரா இடையே ரயில் பாதை அமைக்க இந்தியா முன் வந்து உதவ வேண்டும் என அக்கடிதத்தில் வங்கதேசப் பிரதமர் ஷேக்ஹசீனா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.