கேரளாவுக்கு வாங்க.. முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்த ரமேஷ் சென்னிதலா! பேசியது என்ன?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஜய்யிடம், "நீங்க கேரளா வர வேண்டும்.. போதைப்பொருள் ஒழிப்பிற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை" என கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவில் போதைப்பொருளுக்கு எதிராக நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிராண்ட் அம்பாசிடராக உள்ள நடிகர் மோகன்லால் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தென்னிந்திய சார்பில், போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விஜய் உறுதி அளித்து இருக்கிறார்
அதன் ஒரு பகுதியாக முதல்வர் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இன்று சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது:-
போதைப்பொருள் ஒழிப்புக்கு தமிழகத்தின் ஒத்துழைப்பு தேவை. இது தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் பேசினோம். போதை பொருள் ஒழிப்புக்கான ஆபரேஷன் டுஃபானுக்கு "Toofan" முழு ஆதரவு தெரிவிப்பதாக விஜய் கூறினார். கேரளா - தமிழ்நாடு எல்லையில் போலீசார் கைகோர்த்து செயல்பட வேண்டும். போதைப் பொருள் கடத்துபவர்களை பிடிக்க இணைந்து செயல்பட வேண்டும்.
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார். பள்ளி செல்லும் மாணவர்கள் போதைப் பொருள் மாஃபியால் குறிவைக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பாக பேச வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். தென் மாநிலங்களில் மிக முக்கிய தலைவராக விஜய் உள்ளார். விஜய் பேசினால் இளைஞர்கள் பின்பற்றுவார்கள். பேசுவதாக விஜய் உறுதி அளித்து இருக்கிறார்.
ஒரே மேடையில் நடிகர் மோகன்லால், விஜய்
முதல்வர் விஜய் கேரளா வரவேண்டும். தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுவை மாநிலங்கள் ஒன்றிணைந்து போதைப் பொருள் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. காவல் உயர் அதிகாரிகளையும், துறை செயலாளர்களயும் உடனடியாக முதல்வர் விஜய் அழைத்து பேசினர். பயனுள்ள வகையில் ஆலோசனை இருந்தது. கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய்யை அழைத்துள்ளோம்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கேரளாவில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் பிராண்ட் அம்பாசிடராக உள்ள நடிகர் மோகன்லால் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் இளைஞர்கள் முதல்வர் விஜய்யை பெருமளவில் பின்பற்றி வருகிறார்கள். எனவே அவர், போதைப்பொருட்களுக்கு எதிராக பேசினால் அது இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.














Click it and Unblock the Notifications