கடும் மழை: கோபால் சென்னை திரும்புவதில் சிக்கல்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கச் சென்றுள்ள அரசுத் தூதர் நக்கீரன் கோபால் சென்னை திரும்புவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக காட்டுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடும் மழை காரணமாக வீரப்பன் கும்பல் பாதுகாப்பான வேறு இடத்திற்கு மாறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரையும் ஜூன் 30 ம் தேதி இரவு வீரப்பன் கும்பல் கடத்திச் சென்றது.
இதையடுத்து அவர்களை எந்த ஆபத்துமின்ற மீட்பதற்காக கர்நாடக, தமிழக அரசுகளின் சார்பில் நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்றுள்ளார்.
அவர் வீரப்பனைச் சந்தித்து விட்டு, அவனது கோரிக்கைகள் அடங்கிய கேசட்டை அனுப்பி வைத்தார். இரு மாநில அரசுகளின் சார்பில் வீரப்பனதுகோரிக்கைகளுக்கு பதில்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு வீரப்பன் மேம்போக்கான பதில்களையே இரு மாநில அரசுகளும் அனுப்பி வைத்துள்ளதாக வீரப்பனுடன்தங்கியிருக்கும் தமிழர் விடுதலைப்படையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மேம்போக்கான பதில்களால் வீரப்பனுடன் உள்ள நக்சலைட்டுகள் கடும் கோபமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே அரசு தூதர் கோபால் திங்கள்கிழமை சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் காடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் வீரப்பனின் கூட்டாளிகள் கூட கோபாலை மலையிலிருந்து கீழே கொண்டு விட முடியாது என்பதால் வீரப்பனே வந்துதான் கோபாலை மலைஅடிவாரத்துக்கு கொண்டு விட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ராஜ்குமார் கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து காட்டுக்குள் போலீஸார் மஃப்டியில் நடமாடுவதால் மழை நின்ற பின் போகலாம் என்று கோபாலைவீரப்பன் தடுத்து நிறுத்தி விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இடமாற்றம்:
கடும் மழை காரணமாக தலைமலையிலிருந்து 9 கிலோமீட்டர் தூரம் உள்ல கோடம்பள்ளி மலைக்கு தற்போது வீரப்பன் கும்பல் இடம் மாறியுள்ளது.
இதனால் அரசுத்தூதர் நக்கீரன் கோபால் சென்னை திரும்புவதில் மேலும் ஒரு நாள் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.
எனினும் மழை மற்றும் பாதுகாப்பு காரணமாக பிணைக்கைதிகள் எவரையும் வீரப்பன் விடுதலை செய்யப்போவதில்லை என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications