Corona: மீண்டும் கொரோனா பரவுகிறது? அதே தொண்டை வலி.. தொடர் இருமல்! மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மக்கள் மத்தியில் ஒரு புதிய அச்சம் உருவாகியுள்ளது. காரணம், திடீரென அதிகரித்துள்ள காய்ச்சல் பாதிப்புகள். குறிப்பாக காய்ச்சலுடன் சேர்ந்து சளி, தொண்டை வலி, கடுமையான உடல் வலி, இருமல் போன்ற அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால், "மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்து விட்டதா?" என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

இதனுடன் சேர்ந்து பல்வேறு வகை வைரஸ் காய்ச்சல்களும் பரவி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரஸ் காய்ச்சல்
குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முன்பு சாதாரண காய்ச்சல் வந்தால் 3 அல்லது 4 நாட்களில் குணமாகிவிடும். ஆனால் தற்போது பலருக்கு ஒரு வாரத்துக்கும் மேலாக காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு, தொண்டை வலி, சளி, தொடர்ந்து இருமல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் நீண்ட நாட்கள் தொடர்வதால் மக்கள் பதட்டத்தில் உள்ளனர். பலர் இதை கொரோனா காலத்தில் இருந்த அறிகுறிகளுடன் ஒப்பிட்டு பேச தொடங்கியுள்ளனர்.
தொண்டை வலி
கொரோனா காலத்தில் இருந்த மாதிரியே இப்போதும் உடல் வலி, தொண்டை எரிச்சல், இருமல் வருகிறது" என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சில இடங்களில் மக்கள் தாமாகவே கரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா என்று கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களுடைய தகவலின்படி, தற்போது தமிழகத்தில் டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் சில இடங்களில் காணப்படுகின்றன.
நீர்ச்சத்து குறைபாடு
அவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவது கூட காய்ச்சல் மற்றும் உடல் சோர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக அரசு மருத்துவமனைகளில் இலவசமாக ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
அதேநேரத்தில், "தற்போது கொரோனா பெருமளவில் பரவி வருகிறது" என்று உறுதியாக கூறக்கூடிய சூழல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் போல அனைவருக்கும் கட்டாய பரிசோதனை தற்போது செய்யப்படவில்லை. ஆனால் தேவையென நினைத்தால் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் கொரோனா பரிசோதனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களும் இதே கருத்தையே தெரிவிக்கின்றனர். "காய்ச்சலுடன் வரும் எல்லா நோயாளிகளுக்கும் கொரோனா இல்லை. பருவநிலை மாற்றம் மற்றும் வைரஸ் காய்ச்சல்களும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்" என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மருத்துவ பரிசோதனை
குறிப்பாக மூச்சுத்திணறல், அதிக சோர்வு, நீண்டநாள் இருமல், உணவு சாப்பிட முடியாத நிலை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் கூறுவதன்படி, மக்கள் தாமாக மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடல் சூடு அதிகரிக்காமல் இருக்க போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, ஓஆர்எஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் "மீண்டும் கொரோனா பரவுகிறது" என்ற தகவல்கள் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் உருவாகியுள்ளது. ஆனால் மருத்துவ நிபுணர்கள், "பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் அலட்சியப்படுத்தவும் கூடாது" என்று எச்சரிக்கின்றனர். எனவே காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வதே பாதுகாப்பானது என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications