வாட்ஸாப் வார்ரூம் முழிச்சுக்கிச்சு! தனி கட்சி ஆரம்பிக்கும் அண்ணன்? தீடீரென முளைத்த ’அண்ணாமலை பேரவை’
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப் போகின்றன என்ற பேச்சு வலுத்துள்ள நிலையில், அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் உலாவுகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் 'அண்ணாமலை பேரவை' என்ற பெயரில் இயங்கி வருவதாகவும், வாட்ஸாப் வார்ரூம் மூலம் அவர்களுக்கு தகவல்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவில் குறுகிய காலத்திலேயே மிகவும் வேகமாக வளர்ந்த தலைவராக பார்க்கப்பட்டவர் அண்ணாமலை. திமுக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்து நேரடியாக கேள்வி எழுப்பியது, இளைஞர்களை கவரும் வகையில் அரசியல் போன்ற காரணங்களால் அவர் தனி கவனத்தை பெற்றார்.

குறிப்பாக கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, "தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அண்ணாமலை" என்ற கருத்து கட்சிக்குள் வலுப்பெற்றது. அதிமுக கூட்டணி இல்லாமலேயே பாஜக பல இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றது. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது.
தமிழக பாஜக
இதனால் அண்ணாமலையின் அரசியல் பாணி குறித்து தேசிய தலைமைக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலைமைகள் மாறின. திமுகவை எதிர்கொள்ள அதிமுக கூட்டணி அவசியம் என்ற முடிவுக்கு டெல்லி பாஜக தலைமை வந்தது. அதிமுக தரப்போ, "அண்ணாமலை தலைமையில் கூட்டணி சாத்தியமில்லை" என்ற கருத்தை தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதற்குப் பிறகே தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை அமைதியாக ஓரங்கட்டப்பட்டார் என்ற பேச்சு எழுந்தது.
நயினார் நாகேந்திரன்
அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் நடந்தபோதே அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். "கட்சிக்கு வேகம் கொடுத்த தலைவரை மாற்றுவது சரியான முடிவா?" என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அப்போது டெல்லி தலைமை அதிமுக கூட்டணியே வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அண்ணாமலை
27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 26 இடங்களில் தோல்வி அடைந்தது. சில இடங்களில் டெபாசிட் தொகையையே பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கட்சிக்குள் மீண்டும் அண்ணாமலை பெயர் பேசப்பட தொடங்கியுள்ளது. அதிலும், அண்ணாமலைக்கு அவர் விரும்பிய தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்களை மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. "கட்சிக்காக உழைத்தவருக்கு இதுதானா மரியாதை?" என்று பலர் கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
அண்ணாமலை பேரவை
இந்த சூழலில்தான் தற்போது "அண்ணாமலை பேரவை" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குழுவை 'வார் ரூம்' நிர்வாகிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குழுவில் அண்ணாமலை தொடர்பான தகவல்கள், அவரது பழைய பேச்சுகள், அரசியல் கருத்துகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து தொடர்ந்து பகிரப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் தலைவர்?
இதனால், "அண்ணாமலை மீண்டும் தமிழக பாஜக தலைவராக வருகிறாரா?", "அவருக்கு மத்திய அரசியலில் புதிய பொறுப்பு கிடைக்குமா?" என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேநேரத்தில், அண்ணாமலை கடந்த சில வாரங்களாக மிகவும் அமைதியாக இருப்பதும் அரசியல் கவனத்தை பெற்றுள்ளது. தேர்தல் தோல்வி குறித்து பெரிய அளவில் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. பொதுக்கூட்டங்களிலும் அதிகமாக பங்கேற்கவில்லை. இதுவே அவரது அடுத்த அரசியல் முடிவு குறித்து பல்வேறு யூகங்களுக்கு காரணமாகியுள்ளது.
டெல்லி தலைமை
சிலர், "தமிழகத்தில் பாஜக தனியாக வளர வேண்டுமெனில் அண்ணாமலை போன்ற முகம் தேவை" என்று கூறுகின்றனர். மற்றொரு தரப்பு, "அவருக்கு டெல்லி தலைமையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம்" என்றும் பேசுகிறது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை தனி கட்சி தொடங்கலாம் என்ற பேச்சுகளும் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்தது. தற்போது "அண்ணாமலை பேரவை" என்ற பெயரில் குழு செயல்பட தொடங்கியிருப்பது அந்த யூகங்களை மீண்டும் கிளப்பியுள்ளது. ஆனால் இதுவரை அண்ணாமலை தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications