செந்தில் பாலாஜி எங்கே? ஸ்டாலின் லண்டன் போனது இதுக்குத்தானோ? அர்ஜுன் சம்பத் சந்தேகம்!
சிவகங்கை: செந்தில் பாலாஜி எதற்காக ஓடி ஒளிந்திருக்கிறார். தன் மீது தவறு இல்லை என்றால் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியதுதானே என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு விழாவில் செய்தியாளர்களை அர்ஜுன் சம்பத் சந்தித்து பேசியதாவது: திமுகவினருக்கு எந்தவித துணிச்சலும் கிடையாது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்க வேண்டியதுதானே?

அது போல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சாலைகளே போடாமல் சாலைகளை போட்டதாக கணக்கு காட்டி ஊழல் செய்துள்ளார். தற்போது நெஞ்சுவலி என கூறி சிங்கப்பூர் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
திமுக அமைச்சர்கள் பலரும் ஊழல் வழக்குகளில் சிக்கி ஊழல் பெருச்சாளிகளாக வலம் வருகிறார்கள். நீதிமன்றங்களில் தங்களை நிரபராதி என நிரூபிக்காமல் தவெக அரசின் நடவடிக்கைகளுக்கு பயந்து அஞ்சுகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் லண்டன் சென்றுள்ளதும் இதற்காகத்தானோ என்னவோ? என நான் நினைக்கிறேன். அவர் பேரனின் பட்டமளிப்பு விழாவுக்கு ஐரோப்பா சென்றுள்ளார். அவரது பேரன் மட்டும் லண்டனில் படிக்கலாம்!
திராவிட இயக்கங்களின் மதுவிலக்கு கொள்ளை முழுக்க முழுக்க குழப்பங்கள் நிறைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் கள்ளுக்கடைக்கு தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் லாபம் எல்லாம் தனியார் மதுபான ஆலை நிறுவனத்திற்கே அதிகம் கிடைக்கும். டாஸ்மாக் கடைகளை முதல்வர் விஜய் மூட முடிவு செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் 40 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த போது எந்த மக்களும் பாதிக்கப்படவில்லை.
பீகாரை போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும். போதை பொருள் விழிப்புணர்வுகளை முதல்வர் விஜய் செய்து வருகிறார், அது எல்லாவற்றையும் விட டாஸ்மாக் கடைகளை மூட விஜய் ஒரு உத்தரவு போட்டால் போதும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகவும் அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ 35 கோடி வரை பணம் கொடுப்பதாகவும் தன்னிடம் திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும் ஊத்தரங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி, அசோக்கிற்கு இந்த பேரத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்த கரூர், சென்னையில் இருவரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் 6 நாட்களாக தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து திங்கள்கிழமையான இன்று காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியும் அவர்கள் இருவரும் இதுவரை ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை, இதனால் மறு சம்மன் அனுப்பலாமா என்ற யோசனையில் போலீஸார் உள்ளனர்.














Click it and Unblock the Notifications