கரூர் கூட்ட நெரிசல்.. சிபிஐ விசாரணையை கேலிக்கூத்தாக்கும் தவெக, பாஜக
சென்னை: முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுடன் கலந்துரையாடவும் விஜய் திட்டமிட்டுள்ளார். தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பாஜக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணையை கேலிக்கூத்தாகும் வகையில் கரூர் சம்பவம் தொடர்பாக விமர்சனங்களை வைப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதில் முக்கியமானது கரூர் சம்பவம். கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் சென்றிருந்தார். விஜயை காண்பதற்காக அதிகளவு மக்கள் கூடியிருந்தனர். அப்போது கரூரில் எதிர்பாராதவிதமாக நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பாவி மக்களின் துயரம் இப்போதும் ஆறாத ரணமாக உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விஜய், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாத தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கரூர் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஆனால் தவெக தலைவர் விஜய் கரூர் செல்லவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் அங்கிருந்து ஆறுதல் சொல்லாமல் விஜய் அவசர அவசரமாக சென்னை சென்றார். தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட கரூர் சென்று ஆறுதல் சொல்லவில்லை. இது பெரும் விமர்சனத்துள்ளாகியது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடந்த 2025 அக்டோபர் மாதம், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கியிருந்தார்.
விஜய் 2 நாட்கள் பயணம்
அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகியுள்ளார். இந்நிலையில் விஜய் வருகிற ஜூலை 10 ஆம் தேதி கரூர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 நாட்கள் பயணமாக விஜய் கரூர் செல்லவுள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை விஜய் தொடங்கி வைக்கிறார்.
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. தவெகவின் இந்த அரசியல் நகர்வு விசாரணையை பாதிக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளனர். இதனிடையே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் கணக்கை தீர்க்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்பாடு
வழக்கு விசாரணை நிறைவடைவதற்குள் அமைச்சரே திமுகவை பழி தீர்க்கும் தொனியில் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர்கள் சாட்சிகளை கலைக்கும் வகையில் பேசுவதற்கு தடை விதிக்க கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
அந்த சர்ச்சையில் பாஜகவும் ஆஜராகியுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். நாடே அதிர்ச்சியடைந்த ஒரு சென்ஸிடிவான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதை ஆளுங்கட்சி அமைச்சர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் வகையில் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications