திடீர் பூதம்! உணவு கலாச்சாரத்தையே அழிக்கும் குழிமந்தி.. பாரம்பரிய உணவகங்களை முடக்கும் மந்தி ஆபத்து!
திருவனந்தபுரம்: கேரள உணவு கலாச்சாரத்தையும், தென் தமிழக உணவு கலாச்சாரத்தையும் குழிமந்தி உணவுகள் பெருமளவில் அழிப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களின் உணவு பழக்க வழக்கமே இதனால் பாதிக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளா, அதன் இயற்கை எழிலுக்கு மட்டுமன்றி, பன்முகத்தன்மை கொண்ட தனித்துவமான உணவு பாரம்பரியத்திற்கும் உலகப் புகழ்பெற்றது. ஆனால் அதற்கு தற்போது ஆப்பு வைக்க வந்திருக்கிறது இந்த குழி மந்தி.

புட்டு-கடலைக்கறி, இடியாப்பம், அப்பம்-ஸ்டியூ, மரவள்ளிக்கிழங்குடன் கூடிய காரசாரமான மீன் கறி மற்றும் உலகப் புகழ்பெற்ற தலச்சேரி பிரியாணி என கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனி சுவை அடையாளம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கேரளாவின் இந்த உன்னதமான உணவு வரைபடத்தையே ஒற்றை அரேபிய உணவு ஆக்கிரமித்து வருகிறது. அதுதான் ஏமன் நாட்டின் பாரம்பரிய உணவான குழிமந்தி!
குழி மந்தி என்னும் படுபாதகன்
இன்று கேரளாவின் எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையிலோ அல்லது கிராமப்புற வீதிகளிலோ பயணித்தால், அங்கு வரிசையாக பிரம்மாண்டமான விளக்குகளுடன் மந்தி உணவகங்கள் முளைத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் முன்பு போல நாடன் உணவு வகைகளை பார்க்க முடியாது.
இந்த அபரிமிதமான வளர்ச்சி வெறும் தற்காலிக உணவு மோகம் அல்ல, மாறாக இது கேரளாவின் ஒட்டுமொத்த பூர்வகுடி உணவு கலாச்சாரத்தையே மெல்ல மெல்ல அழித்து வரும் ஒரு பேராபத்து என்று சமூக ஆர்வலர்களும், பாரம்பரிய சமையல் கலைஞர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதில் சிக்கல் தற்போது தென் தமிழ்நாடான நெல்லை, குமரியில் கூட அதிகமாக மந்தி கடைகள் மொய்க்க தொடங்கிஉள்ளன . இந்த நிலையை சமூக ஆய்வாளர்கள் மம்மி எப்படி இறந்த உடலில் செய்வார்களோ அதோபோல் கேரளா உணவுகளை கொலை செய்யும் Mandification என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
பாரம்பரியத்தை முடக்கும் பொருளாதார ஆதிக்கம்
கேரளாவின் பாரம்பரிய உணவகங்களான தட்டுகடைகள் இந்த மந்தி உணவகங்களின் வணிக உத்தியோடு போட்டியிட முடியாமல் திணறி வருகின்றன. ஒரு தட்டுகடையிலோ அல்லது சாதாரண உணவகத்திலோ ஒரு முழுமையான கேரள சாப்பாடு தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு பல்வேறு வகையான காய்கறி பொரியல்கள், அவியல்கள் பிரத்யேக மசாலாக்கள் மற்றும் மீன்-இறைச்சி தயாரிப்புகளுக்கு அதிக நேரமும், ஆட்கூலியும் தேவைப்படுகிறது.
ஆனால், குழிமந்தியின் வணிக மாதிரி முற்றிலும் வேறானது. இது மொத்தமாக தயாரிக்கப்படுகிறது. தரையின்கீழ் அமைக்கப்படும் பெரிய குழிகளில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கிலோ பாசுமதி அரிசியும், அதன் மீது இறைச்சியும் வைக்கப்பட்டு, வெப்பத்தில் ஆட்டோமேட்டட் முறையில் சமைக்கப்படுகிறது.
இதனால் தயாரிப்பு செலவு பெருமளவு குறைகிறது. இந்த பொருளாதார சாதகத்தைப் பயன்படுத்தி, மந்தி உணவகங்கள் ஒரு ஃபுல் மந்தி தட்டை மிகக் குறைந்த விலையில் 4 முதல் 5 பேர் சாப்பிடும் வகையில் வழங்குகின்றன.
மேலும், பல உணவகங்கள் அன்லிமிடெட் ரைஸ் சலுகையையும் வழங்குகின்றன. இதனால் கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் தினசரி உணவாக மந்தியையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன் விளைவாக, பாரம்பரிய உணவுகளை விற்கும் உள்ளூர் கடைகள் வாடிக்கையாளர்களை இழந்து நலிவடைந்து வருகின்றன.
ஒரு பிராந்தியத்தின் கலாச்சாரம் என்பது அங்குள்ள மக்கள் எதை ரசித்து சாப்பிடுகிறார்கள் என்பதில் அடங்கியுள்ளது. கேரள உணவு என்பது தேங்காய் எண்ணெய், குடம்புளி, கறிவேப்பிலை மற்றும் காரமான உள்ளூர் மிளகுகளின் கலவையாகும். ஆனால் மந்தி என்பது மிகவும் லேசான அரேபிய மசாலாக்கள் மற்றும் அதிகப்படியான மயோனைஸ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
தொடர்ந்து மந்தி உணவையே சாப்பிடுவதால், அடுத்த தலைமுறை இளைஞர்களின் சுவை உணர்வு முற்றிலும் மாறி வருகிறது. காரசாரமான, பன்முக சுவைகள் கொண்ட பாரம்பரிய உணவுகளின் மீதான ஈர்ப்பு குறைந்து, ஒருவித மந்தமான சுவைக்கு ஒட்டுமொத்த கேரளாவும் பழகி வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications