இரத்தக் களரியான இலங்கை ஜெயில்.. படங்களில் கூட பார்க்க முடியாத வன்முறை! 25 பேர் பலியான கொடூரம்
கொழும்பு: இலங்கை சிறைச்சாலையில் நடைபெற்ற கடுமையான மோதலில் 25 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, தற்போது ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. வடசென்னை, விருமாண்டி போன்ற படங்களில் மட்டுமே நாம் பார்த்த சிறைச்சாலை சண்டை அங்கே நிஜமாக நடந்து உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தொடங்கி, திங்கட்கிழமை வரை நீடித்த கோரமான வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதில் நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கைதிகள் மட்டுமன்றி போலீஸ் அதிகாரிகளும் இதில் பலியாகி உள்ளன.
இதில் 20 கைதிகளும், 5 சிறைத்துறை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வன்முறை வெடித்தது எப்படி?
சிறைச்சாலை வட்டாரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் சிறைக்குள் இருந்த இரு வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. போதை பொருள் பிரிப்பது மற்றும் விநியோகம் செய்வதில் இந்த மோதல் ஏற்பட்டு உள்ளது.
ஆரம்பத்தில் சாதாரண கைகலப்பாகத் தொடங்கிய இந்த சண்டை, சில நிமிடங்களிலேயே கட்டுகடங்காத வன்முறையாக மாறியது. ஆயுதங்களுடன் கைதிகள் ஒருவரையொருவர் தாக்கி தாக்கிக் கொண்டனர். ஞாயிறு இரவு நிலவரப்படி நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் நம்பியிருந்தது.
ஆனால், திங்கட்கிழமை காலை நிலைமை இன்னும் மோசமானது. மீண்டும் மோதல் மோசமாக வெடித்தது. ஒரு குறிப்பிட்ட கைதிகள் குழு, சிறையின் பிரதான நுழைவாயிலை உடைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாகத் தப்பியோட முயன்றது. இதனைத் தடுக்க முயன்ற சிறைக்காவலர்கள் மீது கைதிகள் கொடூரமான தாக்குதலைத் தொடுத்தனர். இந்த திடீர் தாக்குதலில் 5 சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
துப்பாக்கிச் சூடும்.. ஹெலிகாப்டர் ரோந்தும்
நிலைமை முற்றிலும் கைமீறிப் போனதை அடுத்து, இலங்கை அரசின் அதிரடிப்படை மற்றும் வழக்கமான போலீஸ் பிரிவுகள் சிறைக்குள் விரைந்தன. சிறை நுழைவாயிலை உடைக்க முயன்ற கைதிகளைக் கட்டுப்படுத்தவும், பெரும் தப்பிப்பு முயற்சியைத் முறியடிக்கவும் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று. இதில் பலர் காயம் அடைந்தனர். 6க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சிறையைச் சுற்றிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. கைதிகள் வெளியே தொடர்புகொள்வதையும், வதந்திகள் பரவுவதையும் தடுக்க அந்தப் பகுதியில் மொபைல் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிறைக்குள் இருந்து அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டதால், வெளியே திரண்டிருந்த கைதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்ந்தனர். தங்கள் உறவுகளின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்கள் சிறை வாசலில் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறைக்கு வெளியேயும் பதற்றமான சூழல் நிலவியது.
தற்போது நீர்கொழும்பு சிறையில் இருக்கும் பதற்றத்தைக் குறைப்பதற்காக, அங்குள்ள கைதிகளைக் குழுக்களாகப் பிரித்து தீவின் பிற பகுதிகளில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளுக்கு அவசர அவசரமாக மாற்றும் பணிகளைச் சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது.















Click it and Unblock the Notifications