பதவியேற்ற 12 நாட்களில் 30+ கொடூர சம்பவங்கள்.. விஜய் அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: "புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது." என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 10 வயது மகள், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர், அக்கம் பக்கத்திலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், அன்றிரவே சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, நேற்று காலையில் அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. சிறுமியின் வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தில் அச்சிறுமி பயணம் செய்வது கண்டறியப்பட்டது. நேற்று பிற்பகலில் கார்த்தியை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே அறிமுகமான அந்தச் சிறுமிக்குச் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று இக்கொடூர செயலில் ஈடுபட்டதை அவன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோகன்ராஜ் என்பவருக்கு இந்த விவகாரம் தெரிந்தும் வெளியில் சொல்லாமல் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications