வீரப்பன் கோரிக்கையை நிறைவேற்றராஜாராம் வேண்டுகோள்
சென்னை:
வீரப்பன் கோரிக்கைகளில் ஒன்றான பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை உடனே திறக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் க.ராஜாராம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடத்திச் சென்றுள்ள கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க சந்தனக் கடத்தல் வீரப்பன் 10 கோரிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
கோரிக்கைகளில் 4-வது கோரிக்கை மனித சமுதாயத்துக்கே பொதுவான கோரிக்கையாகும். பெங்களூரில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைதிறக்க வேண்டும் என்பதுதான் அது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே அச் சிலை நிறுவப்பட்டு விட்டது. ஆனால், இன்று வரை அச்சிலை திறக்கப்படவில்லை.நானும் அது குறித்து தமிழக மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால், சூழ்நிலை காரணமாக எனது கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜ்குமாரை விடுவிக்க 10 கோரிக்கைகளைத்தெரிவித்துள்ள வீரப்பனுக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை, ராஜ்குமாரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பதுதான்.
விடுதலை செய்யப்படும் ராஜ்குமார் கலந்து கொள்ளும் வகையில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழா இரு மாநில அரசுகளும் நடத்த வேண்டும். அந்தவிழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும்.
அதே போல் சென்னையில் சர்வக்ஞர் சிலைத் திறப்பு விழாவிலும் ராஜ்குமார், சிவாஜி கணேசன் இருவரும் கலந்து கொள்ள இரு மாநில அரசுகளும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ராஜாராம்.