சென்னையில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு
சென்னை:
பழைய சுவர் இடிந்து விழுந்து 3 பேர் இறந்தனர். சென்னையில் புதன்கிழமை இச் சம்பவம் நடந்தது.
கொண்டித்தோப்பு, ராமசாமி தெருவில் ஹோட்டல்களுக்கு சமையலறை உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
இந் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலைக்கு எதிரே பிளாட்பாரத்தில் வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்வர். பிளாட்பாரத்தை ஒட்டி காலிமனையும் அதைச் சுற்றி சுமார் 20 அடி உயர பழைய சுவரும் இருந்தது.
வழக்கம்போல வியாழக்கிழமை காலை தொழிற்சாலை ஊழியர்கள் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
பகல் சுமார் 12 மணி அளவில் காலி மனையில் இருந்த மரம், பலத்த காற்றால் அருகில் இருந்த சுற்றுச் சுவர் மீது சாய்ந்தது.
இதனால், மரத்தின் பாரம் தாங்காமல், அந்த பழைய சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த இடிபாடுகளில் சிக்கி தொழிற்சாலை ஊழியர் ஆறுமுகம்(60) சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தொழிற்சாலை ஊழியர்களுக்கு கையுறை விற்பதற்காக வந்த ஒருவரும் அவருடன் வந்த சிறுவனும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். சுவர் இடிபாடுகளை நீக்கி அதற்குள் சிக்கியவர்களை அவர்கள்மீட்டனர்.
படுகாயமடைந்த கையுறை வியாபாரியும், சிறுவனும் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியில் இருவரும்இறந்துவிட்டனர்.
இச் சம்பவம் குறித்து ஏழு கிணறு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக பலமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விட்டதாக செய்திகள் வந்தன.