51 தடா கைதிகள் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி
மைசூர்:
51 தடா கைதிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான உத்தரவை மைசூரில் உள்ள தடாநீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது.
தனது 64 பக்க உத்தரவில், தடா சட்டத்தின் 3, 4 மற்றும் 5 ஆகிய பிரிவுகளின் கீழ் 51 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற அரசு வழக்கறிஞர்அஸ்வின் குமார் ஜோஷிக்கு நீதிபதி ராஜேந்திர பிரசாத் அனுமதி அளித்தார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்துள்ள சந்தனக் கடத்தல் வீரப்பன், பிணைக் கைதிகளைவிடுவிக்க 14 கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
வீரப்பனின் கோரிக்கைகள் பற்றி தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் தீவிர ஆலோசனை நடத்தி கோரிக்கைளுக்கான பதில்களை தெரிவித்தன.வீரப்பனின் 14 கோரிக்கைகளில், கர்நாடக சிறையில் உள்ள தடா கைதிகள் 51 பேரையும் விடுவிக்கவேண்டும் என்பது ஒரு கோரிக்கையாகும்.
வீரப்பனின் இக் கோரிக்கையை ஏற்று 51 பேரையும் விடுவிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துவிட்டது. 51 பேர் மீதான தடா வழக்கு மைசூர் தடாநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், அவர்களை உடனே விடுவிக்க முடியவில்லை.
இதையடுத்து ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின் தீவிரத்தை அடுத்து 51 தடா கைதிகள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு முடிவுசெய்தது. அது தொடர்பாக தடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம் மனுவை ஏற்று தடா கைதிகள் 51 பேர் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள கர்நாடக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தடா கைதிகளை விடுவிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருடைய தந்தை தாக்கல் செய்த மனுவைத்தள்ளுபடி செய்த நீதிபதி, இவ் வழக்கை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தடா நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து தடா கைதிகள் 51 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி இந்த வழக்கை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். 51 தடா கைதிகளுக்கான ஜாமீன் மனுக்கள் அங்கு விசாரிக்கப்படும்என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
12 பெண்கள் உள்பட 51 பேரும் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1992-ம் ஆண்டு மே 20-ம் தேதி ரமாபூர் போலீஸ் நிலையத்தில் 5 போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கிலும், 1992-ம் ஆண்டுஆகஸ்ட் 14-ம் தேதி ஹரிகிருஷ்ணா மற்றும் ஷக்கீல் அகமது ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கிலும், 1993-ம் ஆண்டு மே 2-ம் தேதி நடந்தமோதலில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 6 பேரைக் கொலை செய்தது தொடர்பாகவும் இவர்கள் 51 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மைசூர் தடா நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தலைமையிலான உயர்மட்டக் குழு சனிக்கிழமைஆலோசனை நடத்தியது.
பின்னர் நிருபர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது:
மைசூர் தடா நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எதிர்க்காது. சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் சென்றுள்ள நிலையில் தமிழகஅரசிடமிருந்து தகவலை கர்நாடக அரசு எதிர்பார்த்துள்ளது.
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் ஜப்பான் பிரதமர் யோஷிரோ மோரியின் இரண்டு நாள் பெங்களூர் பயணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாதுஎன்றார் கிருஷ்ணா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications