மாயமான சென்னை பள்ளி மாணவிகள் ஊட்டியில் மீட்பு
சென்னை:
பள்ளிக்கு சென்றபோது மாயமான சென்னை மாணவிகள் நான்கு பேர் ஊட்டியில் மீட்கப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள பிரபல ஆங்கிலப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் திவ்யாமலர், சரோஜினி, ப்ரீத்தி, ஸ்ரீநிதி.
நான்கு பேரும் நெருங்கிய தோழிகள். படிப்பில் அதிக நாட்டமில்லாத காரணத்தால் இவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். பெற்றோர்களை அழைத்துவரும்படி நால்வருக்கும் உத்தரவு வேறு.
இந்நிலையில் வீட்டில் விஷயத்தை மறைத்து விட்டு நான்கு பேரும் திடீரென்று மாயமாகி விட்டனர். திடீரென்று நான்கு மாணவிகளை காணவில்லை என்றதும்சென்னை காவல் துறை அலறியது.
ஒட்டுமொத்த பள்ளியும், பெற்றோர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். சக மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் அந்த நான்கு பேரும் மதியம் ஒரு மணிஅளவில் ஆட்டோவில் சென்றது தெரியவந்தது.
அது போலீஸ் சிந்தனையில் ஆட்டோவில் கடத்தலா என்ற சந்தேகத்தை கிளப்பியது. ஒரு ஆட்டோவை விடாமல் சோதனை செய்தனர். தகவல் இல்லை.
தமிழகம் முழுவதும் தகவல் பறந்தது. மாணவிகளின் அங்க அடையாளங்களுடன் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. குன்னூர் பஸ் நிலையத்தில் நான்கு மாணவிகளும்பள்ளிச் சீருடையில் நின்று கொண்டிருப்பதை ஊட்டி போலீசார் பார்த்து விசாரித்தபோது விவரம் தெரிந்தது.
ஆரம்பத்தில் சுற்றுலா வந்த மாணவிகள் என்று டிமிக்கி கொடுத்து பார்த்த மாணவிகள் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டனர். சென்னை போலீசுக்கு தகவல்தெரியவர இங்கிருந்து ஒரு டீம் ஊட்டி சென்று நான்கு மாணவிகளையும் அழைத்துக் கொண்டு வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.