கோவையில் ரூ. 1 கோடியில் "கம்ப்யூட்டர் இன்குபேட்டர்
கோவை:
கோவையில் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தொழில் தொடங்க முன்வரும் இளம் தொழில் முனைவோருக்காக ரூ. ஒரு கோடிசெலவில் கம்ப்யூட்டர் மையம் (இன்குபேட்டர்) ஒன்றை அரசு தொடங்கவுள்ளது.
கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கான தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.
கோவையின் மையப்பகுதியில் இந்த தொழில்நுட்ப மையம் (இன்குபேட்டர்) அமைக்கப்படும். இதில் சேர கம்ப்யூட்டரில் குறைந்தபட்சக் கல்வித் தகுதிபோதுமானது.
இதில் பங்கேற்கும் தொழில் முனைவோர் முதலில் மையத்தின் உறுப்பினராக வேண்டும். இவர்களுக்கு, மையத்தில் குறைந்தபட்சம் 250 சதுர அடிபரப்பு முதல் ஆயிரம் சதுர அடி வரை ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு குறைந்த பட்ச வாடகையும் வசூலிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளில் தொழிலதிபர்களாக வெளியேற வாய்ப்பு ஏற்படுகிறது. தொழில் முனைவோர், இதில்சாஃப்ட்வேர், மெயில் சர்வீஸ், மற்றும் தகவல் தொழில் நுட்ப அடிப்படையிலான அனைத்துப் பணிகளையும் இங்கு மேற்கொள்ளலாம்.
இதற்கு வசதியாக இந்த மையத்தில் வி.எஸ்.என்.எல், இன்டர்நெட் இணைப்பு, டெலிபோன் வசதி, மின்சார ஜெனரேட்டர் வசதி உட்பட பல்வேறு வசதிகள்அளிக்கப்படுகின்றன. முதலில் 20 உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இம் மையம் துவங்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாய்செலவிடப்படுகிறது. அடுத்த கட்டமாக 3 ஆயிரம் சதுர அடிப் பரப்பு தேர்வு செய்யப்பட்டு மையம் மேலும் விரிவுபடுத்தப்படும்.
தேர்வு பெறும் உறுப்பினர்கள் இம்மையத்தில் நுழைவுக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதுமானது. மூன்று ஆண்டுகளுக்குஇங்கு தங்கள் நிறுவனத்தை நடத்தலாம். பின்னர் இவர்கள் சுய தொழிலதிபர்களாக வெளியேற வாய்ப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் கோவை, மதுரை இரண்டு இடங்களில் மட்டுமே இம்மையங்கள் துவக்க அனுமதிக்கப்பட்டது. முதலில் கோவையில் இதுதுவக்கப்படுகிறது. மதுரையில் தேவையான இன்டர்நெட் இணைப்பு வசதி கிடைக்காததால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கோவை மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் பொன்னுசாமி தலைமையில் செயல்படுத்தப்படவுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தஆர்வமுள்ள தொழில் முனைவோர் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.