தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதில் மீண்டும் தாமதம்
டெல்லி:
வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடைக்கு தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட புதிய மனு முதல்வரின் ஒப்புதலுக்காக சென்னைக்குஅனுப்பப்பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து கர்நாடக முதல்வர் கிருஷணாவை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் கிருஷ்ணா.
அக்கூட்டத்தில், கடத்தல் சம்பவம் தமிழக எல்லையிலேயே நடந்துள்ளது. ஆனால் உச்சநீதிமன்றமோ தேவையில்லாமல்கர்நாடகத்தைக் கண்டித்துள்ளது. எல்லா பழியையும் தமிழகத்தின் மீதுதான் சுமத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து, கர்நாடகத்தின் அணுகுமுறையில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக முதல்வர் கருணாநிதி பெங்களூருக்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோபால் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வீரப்பனைச் சந்தித்த விவரங்களைக் கூறி வருவது வழக்கம்.
கடைசி முறையாக அவர் காட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அவரும் பெங்களூருக்கு அனுப்பப்பட்டு கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கோபால் தெரிவித்த தகவல்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது மூன்றாவது முறையாகக் காட்டுக்குச்சென்ற கோபால் திரும்புவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்காக தமிழக அரசு மனு தயாரித்து விட்டது.
அதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பெங்களூரில் இருமாநில முதல்வர்கள் நடத்திய ஆலோசனை குறித்த விவரங்கள்ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீண்டும் புதியமனு தயாரிக்கப்பட்டு முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனுவில் தேவைப்பட்டால் சில மாற்றங்கள் செய்து திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.