"தவறுகளைத் தட்டிக் கேட்க ஆட்சியில் பங்கு தேவை
சென்னை:
ஆட்சியில் பங்கு இருந்தால் தான் தவறுகளை தட்டிக் கேட்க முடியும் என்று த.மா.கா முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமானப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருவாடானையில் நடந்த த.மா.கா. மாநாட்டில் கலந்து கொண்டு சிதம்பரம் பேசியதாவது:
தேர்தலில் தோல்வி பெரிய விஷயமல்ல. ஒரு தேர்தலோடு கட்சி செயல்முறைகள் முடிந்து விடாது. நடக்கப் போகும் தேர்தலில் கூட்டணி ஆட்சிஅமைவது உறுதி. கூட்டணி மூலம் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
நான் அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கினேன். அதுவே பா.ஜ.க ஆட்சியில் லட்சங்களாகக் குறைந்தது.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறோம். பங்கு இருந்தால் தானே தவறுகளை தட்டி கேட்க முடியும். தி.மு.க.வுடன் கூட்டணி இருந்தபோது தட்டிக்கேட்காதீர்கள். குட்டி கேளுங்கள் என்று கருணாநிதி கூறினார். ஆனால், நாங்கள் தட்டினாலும், குட்டினாலும் அவர்கள் கேட்கவில்லை.
தற்போது தமிழகத்தில் லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் நடைபெறாது. சமத்துவபுர வீடுகள் இடிந்து விழுகின்றன. சமத்துவரபுரம் கட்டுவதால்மட்டும் வீட்டு பஞ்சத்தை தீர்த்து விட முடியாது. கட்டிய 6 மாதங்களில் 100 வீடுகளில் 25 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. திராவிடக் கட்சிகளால் வறுமையை போக்கமுடியவில்லை என்றார் சிதம்பரம்.