ஒரே வாரத்தில் 23,000 இலங்கை அகதிகள் வருகை
சென்னை:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே உச்சக் கட்டப் போர் நடந்து வருவதையடுத்து தமிழகத்திற்கு அகதிகள் வருகைஅதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 ஆயிரம் அகதிகள் தமிழகம் வந்துள்ளனர் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் சண்டை ஆரம்பித்த நாளில் இருந்து அகதிகள் வருகை நீடிக்கிறது. 1990-91ல் துவங்கிய அகதிகள் வருகை இதுவரை நின்றபாடில்லை. 1996ல்தான் பெருமளவில் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
கடுமையான சண்டை எப்போதெல்லாம் நடக்கிறதோ அப்போதெல்லாம் அகதிகள் வருகையும் அதிகரிக்கும். சண்டை நடக்கும் பகுதிகளை சேர்ந்ததமிழர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு தமிழகத்திற்கு வருகின்றனர். அவர்களுடன் காயமடைந்தவர்களும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இப்படி வந்தவர்கள் மதுரை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் அப்பாவிமக்கள். ஆனால், அகதிகள் போர்வையில் காயம்பட்ட போராளிகள் ஊடுருவி விடுகின்றனர். அப்படி ஊடுருவிய 110 போராளிகளை கியூ பிரிவுபோலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இவர்களில் ஒருசிலர் தீவிர சிகிச்சைக்காக தமிழகம் வழியாக வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.