வாஷிங்டனில் வாஜ்பாய் அலை
வாஷிங்டன்:
பிரதமர் வாஜ்பாய் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள வாஜ்பாய், வியாழக்கிழமை கேபிடல் ஹில்லில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.உரையாற்றி விட்டு வந்த வாஜ்பாய், அமெரிக்க வெளியுறவுத்துறை விவகாரக் கமிட்டி தலைவர் ஜெசி ஹெல்ம்ஸ் மற்றும் சர்வதேச உறவுக் கமிட்டிதலைவர் பெஞ்சமின் கில்மேன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா வாஜ்பாய் உரை குறித்துக் கூறுகையில், வாஜ்பாய் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகவும்நன்றாகவும், தோழமை உணர்வுடனும் இருந்தது. பிரதமர் உரையினால் இந்தியா- அமெரிக்காவின் பொருளாதார, அரசியல் உறவுகள் மேலும்வலுப்பெறும் என்றார்.
6 பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தம்:
பிரதமர் வாஜ்பாய் மற்றும் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் முன்னிலையில் இந்திய, அமெரிக்க வர்த்தகர்களிடையே 6 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையெழுத்தானபோது அமெரிக்க வர்த்தக செயலாளர் நேர்மன் மினிடா மற்றும் இந்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் உடனிருந்தனர்.
போக்குவரத்து, மின்சாரத்துறை, மருத்துவத்துறையில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விருந்து:
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாஜ்பாயின் உரைக்குப்பின் கேப்பிடல் ஹில்லில் வாஜ்பாய்க்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் 200 க்கும் மேற்பட்டஇந்திய, அமெரிக்க வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபையைச் சேர்ந்தவர்கள் விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தின்போது வாஜ்பாயிடம்அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.அகர்மேன் கூறுகையில், 21 ம் நூற்றாண்டில், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் கைகோர்த்துநடப்பது சந்தோஷமாக உள்ளது என்றார்.
அதே போல் வாஜ்பாயின் நாடாளுமன்ற உரைக்குப் பின் அமெரிக்காவில் இந்திய அலை வீசுகிறது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வரலாறு படைத்த நாள்:
பிரதமர் வாஜ்பாய் உரை நிகழ்த்திய நாள், கடந்த 20 ஆண்டுகளாக உள்ள இந்திய, அமெரிக்கா உறவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்றுஅமெரிக்க நாடாளுமன்ற எம்.பி. சாம் ஜெஜ்டென்சன் வர்ணித்தார்.
அவர் கூறுகையில், வாஜ்பாயின் உரைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மிகுந்த வரவேற்பு இருந்தது. வர்த்தகம், பொருளாதாரம் உள்பட பிறதுறைகளில் சர்வதேச அளவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இனிமேல் கைகோர்த்து நடைபோடும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.