பெங்களூரு கள்ளக்காதலிக்கு ஐ லவ் யூ சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்! இரவில் கத்தியை தூக்கி.. சிக்கியது எப்படி
பெங்களூரு: பெங்களூருவில் ஒரு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.. கொலை முயற்சியும் நடந்துள்ளது.. மாமனாரையும் கூட விட்டு வைக்காமல் வெட்டுக் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார்.. இப்படிப்பட்ட காரியத்தை செய்தவர், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை கர்நாடகா மாநிலத்தில் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் என்ன நடந்தது என்று சுருக்கமாக பார்ப்போம்..!!
பெங்களூரு நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருபவர் பைரப்பா.. இவரது மனைவி வழக்கறிஞர் ரேவதி.. மாகடி மெயின் ரோட்டில் வசிக்கும் இந்த தம்பதியருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.

பெங்களூரூ ரேவதி
திருமணமான ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாகத்தான் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பைரப்பாவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது.. குடிப்பழக்கமும் சேர்ந்து கொண்டது.. வரதட்சணை கொடுமையும் சேர்ந்து கொண்டது.. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் பைரப்பா, மனைவியை கோடூரமாக அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
"கல்யாணத்தின்போது, எனக்கு வீடு, நிலம் எதுவும் தரவில்லையே ஏன்? பெற்றோரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணம், சொத்துக்களை வாங்கி வா" என்று அடித்து சித்ரவதை செய்தாராம்..
கள்ளக்காதலிகள் - ஐ லவ் யூ
தன்னுடைய மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ரேவதியின் அப்பா, ஏற்கனவே பைரப்பாவிற்கு 2 கார்களை வாங்கி தந்துள்ளார்.. அத்துடன் மாப்பிள்ளை கேட்டபோதெல்லாம் பணமும் தந்துள்ளார். ஆனாலும் வரதட்சணை கேட்டு அடம் பிடித்து வந்துள்ளார் பைரப்பா.. பணத்தைக் கொண்டு வராததால் மனைவியை அடித்து உதைப்பதையும் நிறுத்தவில்லை.. ஒரு கட்டத்தில் மனைவியின் துணிமணிகளை எல்லாம் வீட்டை விட்டு வெளியில் வீசி அட்டகாசம் செய்துள்ளால்ர.
இதுமட்டுமில்லாமல், பைரப்பாவுக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா மூலம் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. பல பெண்களை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவர்களுக்கு "லவ் யூ, மிஸ் யூ" என மெசேஜ்களை அனுப்பி வந்தாராம்..
மாமனாரையும் வெட்ட பாய்ந்து
இதை பார்த்து கொந்தளித்து போன மனைவி, கணவரை தட்டி கேட்டுள்ளார்.. உடனே தன் மனைவி மீது தேவையில்லாமல் சந்தேகப்பட்டு, "இந்தக் குழந்தை என்னுடையதே இல்லை" எனக் சொல்லி, டார்ச்சரை அதிகப்படுத்தி உள்ளார்.. இதனிடையே, பைரப்பாவின் ஆசைக்கு இணங்க மறுத்த சில பெண்களை அவர் மிரட்டியும் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சில பெண்களே ரேவதியை தேடி வந்து பைரப்பாவின் கொடுமைகளை சொல்லி அழுதுள்ளனர்.
இந்லையில், கடந்த ஜூலை 12 ம் தேதி வீட்டில், வழக்கம்போல் சண்டை வெடித்துள்ளது. இந்த தகராறை தீர்த்து வைப்பதற்காக ரேவதியின் அப்பா அங்கு வந்துள்ளார். அப்போது பைரப்பா உச்சக்கட்ட கோபத்தில், வெட்டுக் கத்தியை எடுத்து வந்து மனைவியையும், மாமனாரையும் வெட்ட பாய்ந்துள்ளார். இதை பார்த்து பயந்துபோன ரேவதி உடனே 112 அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.. ஆனால், எமர்ஜென்சி போலீசாரிடமிருந்து உடனடி உதவி கிடைக்கவில்லை.
கணவரை விடாமல் விரட்டிய மனைவி
இதனால் கெங்கேரி போலீசுக்கு சென்று ரேவதி புகாரளித்துள்ளார். ஆனால், அந்த ஸ்டேஷனில் பைரப்பாவுடன் ஒன்றாகப் படித்த பேட்ச்-மேட் போலீசார் பணியில் இருந்ததால், அவர்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் வெறும் சாதாரண வழக்காக (NCR) மட்டுமே எடுத்துக்கொண்டு பைரப்பாவைக் காப்பாற்ற முயன்றார்களாம்.. அப்போதும் சோர்ந்து போகாத ரேவதி, நேரடியாகக காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதுகொண்டே விவரித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உயர் அதிகாரிகள், பைரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டனர்.. இதனால் கெங்கேரி போலீசாரும் வேறு வழியின்றி பைரப்பா மீது வரதட்சணைக் கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவரை கைது செய்தனர்..
ஹைலைட் என்ன தெரியுமா
இதில் ஹைலைட் என்னவென்றால், கைதான பைரப்பா ஏற்கனவே கடந்த வருடம் ஜூன் மாதம் சுப்ரமண்யபுரா ஸ்டேஷனில் இருந்தபோது, தொழிலதிபர் ஒருவரிடம் 50 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லோக்ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் ஆனவராம்.
இந்த சம்பவம் குறித்துத் தென்மேற்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் அனிதா ஹட்டான்னவர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சப்-இன்ஸ்பெக்டர் பைரப்பா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மனைவியை மிரட்டியுள்ளார். சம்பவம் நடந்த இடம் தாவரேகெரே காவல் நிலைய எல்லைக்குள் வருவதால், மேல் விசாரணைக்காக இந்த வழக்கு பெங்களூரு தெற்கு மாவட்ட தாவரேகெரே போலீசுக்கு மாற்றப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
காக்கி சட்டையை போட்டுக்கொண்டு, மனைவியையே கத்தியால் வெட்ட முயன்ற சப்-இன்ஸ்பெக்டரின் இந்தச் செயல் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....!!














Click it and Unblock the Notifications