"அய்யோ.. வேண்டாம் புதிய கட்சி"
சென்னை:
எம்.ஜி.ஆர்.அமைச்சரவையில் இருந்தவர்கள் புதிய கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்வதாக இருந்த முன்னாள் அமைச்சர்பொன்னையன் திடீரென அந்தக் கட்சியில் சேர விரும்பவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த எஸ்.டி.சோமசுந்தரம், ராஜாராம், பண்ருட்டி ராமச்சந்திரன், வி.வி.சுவாமிநாதன் உள்பட 7 பேர்சேர்ந்து திங்கள்கிழமை புதுக்கட்சி ஆரம்பிக்கவுள்ளனர்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.ஏழை எளிய மக்களின் நல்வாழ்விற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அர்பணித்தார்.
தந்தைபெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை தமிழ் மண்ணில் அரங்கேற்றி வெற்றி கண்டார்.
மாறுபட்ட கருத்துடையோரும், எம்.ஜி.ஆரின் மனித நேயத்தையும், தமிழ் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான சாதனைகளையும் மதித்து, அவரின்மறைவுக்குப்பிறகும் அவருக்கு புகழ்மாலை சூட்டுவது கண்டு தமிழ்த்தாயே மகிழ்ச்சி அடைகிறாள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் லட்சக்கணக்கான உண்மைத் தொண்டர்கள், பல பிரிவுகளாக எதிரும், புதிருமாக செயல்படுவது நாளடைவில் அவரதுபெயரையும், புகழையும் மங்கச்செய்து விடுமோ என்ற அச்ச உணர்வு தமிழ்சமுதாயத்தில் எழுந்துள்ளது.
ஏற்கனவே இருக்கின்ற பல பிரிவுகளை ஒருங்கிணைப்பு மட்டுமே எம்.ஜி.ஆரின் புகழை வளர்க்க உதவியாக இருக்கும். மாறாக மேலும், அவரதுபெயரில் பல கட்சிகள் உருவாகுதலை தமிழ்ச்சமுதாயம் விரும்பாது, ஏற்றுக்கொள்ளாது, அவரது பெயரையும், புகழையும் பின்னடைவிற்கு தள்ளிவிடும்சூழலை உருவாக்கிவிடும்.
எனவே திங்கள்கிழமை எஸ்.டி.சோமசுந்தரம், க.ராசாராம் ஆகியோர் துவக்கும் புதிய அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவிரும்பவில்லை என்பதை அறிவிக்கிறேன். இவ்வாறு, அறிக்கை வெளியிட்டுள்ளார் பொன்னையன்.