சென்னைக்கு வந்த லண்டன் விமானம் பறவை மோதி சேதம்! அதிர்ஷ்டவசமாக தப்பிய 224 பயணிகள்
சென்னை: பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது பறவை ஒன்று மோதியதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. விமானியின் சாதுர்யத்தால் 226 பயணிகளுடன் வந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பறவை மோதி விமானம் சேதமடைந்த சம்பவம் சென்னை ஏர்போர்ட்டில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்க்கு தினமும் அதிகாலை 3.30 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. பின்னர், மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு அதிகாலை 5.35 மணிக்கு இதே விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம்.

பறவை மோதியது
அந்த வகையில் இன்று லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 224 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேருடன் சென்னை விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இன்று சற்று முன்னதாகவே அதாவது அதிகாலை 3 மணிக்கே சென்னை விமான நிலையம் பகுதியை வந்தடைந்தது. தரையிறங்குவதற்கு தயாராக இருந்தது.
இதற்காக விமானி விமானத்தின் வேகத்தையும், உயரத்தையும் படிப்படியாக, குறைத்தார். சுமார் 500 அடி உயரத்தில் பறந்து வந்து கொண்டு இருந்த போது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று பலமாக மோதியது. அதோடு அந்த பறவை விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் சிக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
236 பேர் உயிர் தப்பினர்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக தரையிறங்கக் கூடிய ரன்வேயில் சாதுர்யமாக விமானி இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 236 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விமானத்தின் முன் பகுதியில் இருக்கும் 'ரேடோம்' என்ற பாதுகாப்பு கவசம் சுமார் 18 இஞ்ச் அளவுக்கு சேதமடைந்தது. வானிலை ரேடார் மற்றும் வழிகாட்டும் கருவிகள் இங்கு தான் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு
உடனடியாக பொறியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விமானத்தில் சோதனை செய்தனர். ஆனால் பறவை மோதியதில் விமானம் பலத்த சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு லண்டன் செல்லும் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் லண்டன் செல்ல தயாராக இருந்த 264 பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் பறவை மோதியது குறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையம் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பறவை மோதியதும் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இன்று காலை சென்னை விமான நிலையம் பரபரப்பு ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications