பெரியார் விழாவில் சோனியா கலந்துகொள்ள மாட்டார்
சென்னை:
வரும் 23 ம் தேதி சென்னையில் நடக்கும் பெரியார் விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர்இளங்கோவன் தெரிவித்தார்.
தந்தை பெரியாரின் 122 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நிருபர்களிடம் இளங்கோவன்கூறியதாவது:
கே : அ.தி.மு.க.காங்கிரஸ் உறவில் குழப்பம் இன்னமும் தொடர்வது ஏன்?
ப: எந்தவிதக் குழப்பமும் இல்லை. மதவாத சக்திகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறோம். மதவாத சக்திகளை எதிர்ப்பதேஎங்களது கொள்கை.
கே: காளிமுத்து உங்களைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?
ப: இது மிகவும் சிறிய விஷயம் என்று ஜெயலலிதா கூறிவிட்டார். எனவே இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
கே: காளிமுத்துவுக்கும், உங்களுக்கும் இடையேயான அறிக்கைமோதல் தீருமா? தீராதா?
ப: (சிரித்துக்கொண்டே) அறிக்கை மோதல் தொடராது, சீக்கிரம் தீரும் என்று நம்புகிறேன். அதையே எதிர்பார்க்கவும் செய்கிறேன்.
கே: வரும் 23 ம் தேதி நடக்கும் பெரியார் விழாவில் கலந்துகொள்ள சோனியாகாந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதா?
சோனியாகாந்திக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் விழாக்குழுத் தலைவர் மூப்பனார் அழைப்பு விடுத்திருக்கிறார். இருந்தபோதிலும்,அன்றையதினம் டெல்லியில் மனித உரிமை குறித்த விழாவில் சோனியாகாந்தி கலந்து கொள்வதால் இங்கே நடக்கும் பெரியார் விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்றார் இளங்கோவன்.