வங்கியில் 6 லட்சம் மோசடி செய்ய முயன்றவருக்கு சிறை
சென்னை:
ரூ. 6 லட்சத்திற்கு போலி டிராப்ட் (டி.டி.) கொடுத்து வங்கியை ஏமாற்ற முயன்றவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் பிரெடரிக் அடைக்கலராஜ். வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.
பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள கனரா வங்கியில் இருந்து ரூ. 6 லட்சத்து 52 ஆயிரம் தொகைக்கு டிமாண்ட் டிராப்ட் ஒன்றை எடுத்திருப்பதாகக் கூறி,சென்னை அண்ணா நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் செய்து பணம் பெற முயன்றார்.
ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் அந்த டி.டி. பற்றி விசாரிக்கையில் அது போலி என்பதை கண்டுபிடித்தனர்.
உடனே இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டு, அவர் மீது மோசடி வழக்குதொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றம், மோசடிக் குற்றம் புரிந்த அடைக்கலராஜூக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications