பயங்கரவாதத்தை தடுக்க ஐ.நா.வின் ஆதரவை நாடுகிறது இந்தியா
ஐக்கிய நாடுகள் சபை:
சர்வதேச பயங்கரவாதத்தை தடுத்த நிறுத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்தியாவேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நா.சபையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
இன்று அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கும், தேசியஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, தீவிரவாதிகள் ஆயுதபலமும், பணபலமும் பெற்றிருந்தால் நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து விடும். இந்த நிலை மாற வேண்டும்.எல்லைப்பகுதியில் ஏற்படும் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் இந்தத் திட்டத்திற்கு ஐ.நா.வின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்.
முன்னதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சதார் ஐ.நா.சபையில் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும்.
தெற்காசியப் பகுதியில் அமைதியும், ஸ்தரத்தன்மையும் ஏற்பட வேண்டியது மிகவும் முக்கியம். பேச்சுவார்த்தை மூலமோ அல்லது மத்தியஸ்தம் செய்வதன்மூலமோ காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க பாகிஸ்தான் தயார் என்றார் அப்துல் சதார்.
காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications