9 பஸ்கள் எரிப்பு, 20 பஸ்கள் உடைப்பு- மரணபயத்தில் பயணிகள்
மதுரை:
முதல்வர் மகன் அழகிரிக்காக மதுரையில் வியாழக்கிழமையும் மேலும் 2 பஸ்கள் கொளுத்தப்பட்டன.
இதோடு சேர்த்து மொத்தம் எரிக்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு புதன்கிழமை இரவு அரசு விரைவு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ் வியாழக்கிழமைகாலையில் மதுரை வந்தது.
30க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர். ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு அருகே பஸ் வந்தபோது ஆட்டோவில் வந்தஅழகிரியின் ஆதரவாளர்கள், பஸ்சை வழி மறித்தனர்.
பின்னர் பஸ்சின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.
பயணிகள் உடனே இறங்கி விட்டதால் அனைவரும் உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். பஸ்சுக்கு தீவைத்த இருவரை கைது செய்தனர்.
அதே போல ராமநாதபுரம அருகே ஒரு பஸ் எரிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை அதிகாலைஒரு அரசு பஸ் சென்றது. குண்டாற்று பாலம் அருகில் பஸ் சென்றபோது ஒரு கும்பல் பஸ்சை மறித்து பெட்ரோல் குண்டுகளைவீசியது.
பஸ்சில் 5 பயணிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். பஸ் தீக்கிரையானது.இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் இருந்து கொண்டு தென் மாவட்ட திமுகவை கட்டுப்படுத்தி வந்த முதல்வர் கருணாநிதியின் மகன்அழகிரியுடன் திமுகவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்தித் தலைமை அறிவித்தது.
மதுரை, ராமநாதபுரத்தில் அழகிரியின் ஆதரவாளர்கள் இதுவரை 9 பஸ்களை எரித்துள்ளனர். சுமார் 20 பஸ்கள்தாக்கப்பட்டன.
இதனால் தென் மாவட்டங்களில் மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் பஸ்களில் பயணம் செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.