ப.சிதம்பரத்தை சேர்க்க தமிழக பா.ஜ.க எதிர்ப்பு
சென்னை:
முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சிக்கு வருவதற்கு, தமிழக பாரதிய ஜனதாக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சிதம்பரம் பாரதிய ஜனதா கட்சிக்குள் வருவதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. குறிப்பாக தமிழகபாரதிய ஜனதாக் கட்சியினர் இதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.
தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியினர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், நாங்கள் யாரும் இதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம்.
அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனிடம், சிதம்பரம் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழகத்திலுள்ள பாரதிய ஜனதாக் கட்சியினர் பலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் என்ற முறையில் அத்வானியை, சிதம்பரம் சந்தித்துப் பேசியிருக்கலாம். அந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் எதுவும்இருக்கவேண்டிய அவசியமில்லை என்றார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா உடனிருந்தார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த சிதம்பரம், மூப்பனாருடன் சேர்ந்து தமிழ் மாநில காங்கிரசை நிறுவியர்களில் முக்கியப் பங்குவகித்தார்.
மத்தியில் வர்த்தக அமைச்சராக, நிதிமைச்சராகப் பணியாற்றியவர். 13 ஆண்டுகள் தொடர்ந்து சிவகங்கை எம்.பியாகவும் இருந்தவர். கடந்த தேர்தலில்முதல்முறையாகத் தோற்றார்.
ஆனால், ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று மூப்பனார் முடிவெடுத்ததைத் தொடர்ந்து கட்சி நடவடிக்கைளில் இருந்து சிதம்பரம் ஒதுங்கியே இருந்து வந்தார்.சமீபத்தில் சிதம்பரத்தில் நடந்த த.மா.கா. மாநாட்டையும் சிதம்பரம் புறக்கணித்தார்.
இந் நிலையில் அவர் பாரதீய ஜனதாவில் சேர உள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவர் எங்களுடன் சேர வந்தால், வரவேற்போம் என்றுபாரதீய ஜனதா தலைவர் ஜே.பி. மாத்தூர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இப்போது அவர் எங்களுடன் இணைவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லைஎனவும் கூறியுள்ளார்.
ஆனால், சிதம்பரம் பா.ஜ.கவில் சேர்ந்து திருச்சி எம்.பி. தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருச்சியில் பாரதீயஜனதா எம்.பியாக இருந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்தையடுத்து அந்தத் தொகுதி காலியாக உள்ளது.