ஒலிம்பிக்கில் இந்தியா
கேள்வி - பதில்
கே: துக்ளக் - பிராமணர்களுக்கான பத்திரிக்கை என்று பொதுவான அபிப்பிராயம் உண்டு.மேலும் தாங்கள் வருகின்ற இதழ்களில் வெறுக்கத்தக்கதா பிராமணியம்?என்ற சிறியகட்டுரைத் தொடரை எழுசப் போவதாக அறிவித்துள்ளீர்கள். இது மேற்படி கருத்தை மெய்ப்பிப்பதுபோல் ஆகிவிடாதா? இது குறித்து தங்கள் கருத்து...?
ப: துக்ளக்பிராமணர்களின் பத்திரிக்கைஎன்று நினைப்பவர்கள், அப்படியே நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் உண்மை அதுவல்ல.
துக்ளக், தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் படிக்கக்கூடிய பத்திரிக்கை ; அதன் வாசகர்கள் பல ஜாதியினர், பல மதத்தினர் உண்டு. இந்த உண்மையைப்பொறுக்காதவர்கள்தான் இது பிராமணர்களுக்கான பத்தரிக்கை என்று கூறி, இதன் வீச்சை குறைக்க முனைபவர்கள்.
இதற்காக பயந்து, எதையும் எழுத நினைப்பதோ. எழுதாமல் விட்டுவிட நினைப்பதோ - எனது அணுகுமுறை அல்ல. மனதில் பட்டதைச்சொல்கிறேன் ; கேட்பவர்களோ, கேட்க மறுப்பவர்களோ - எந்த ஜாதியினர் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.
கே: யார் யாரோ எங்கள் ஆதரவில்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறும்போது, துக்ளக் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும்ஆட்சி அமைக்க முடியாது என்று வாசகர்கள் சார்பில் நாங்கள் அறிக்கை விட்டால் ...?
ப: என்ன பிரயோஜனம்? யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். வாசகர்களுக்கென்று ஒரு ஜாதி இல்லையே?
கே: கம்யூனிஸ்ட்கள் இப்போது கம்யூனிசத்தை பின்பற்றுகிறார்களா?
ப: இருக்கலாம் ; உருப்படமாட்டோம் என்கிறார்களே ; அதனால் ஒருவேளை இருக்கலாம்.
கே: எம்.ஜி.ஆர். என்றவுடன் சத்துணவு நினைவுக்கு வரும். கருணாநிதி என்றவுடன் நினைவுக்கு வருவது எது?
ப: வீரப்பன் நினைவுக்கு வராமல் இருந்தால் போதும்; கருணாநிதி தப்பித்து விடலாம்.
கே: கோவிந்தாச்சார்யாவுக்கு கட்சிப் பதவி இல்லை என்று பா.ஜ.க.வில் முடிவாகி உள்ளதாமே ... ஏன்?
ப: பிரதமருக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லை என்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டது; இந்த வெளியேற்றம் நிறைவேற்றுவதற்கு வசதியாக.கோவிந்தாச்சார்யாவே தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டு விட்டார் என்ற செய்திகளை நான் நம்புகிறேன்.
கே: கருணாநிதியிடம் சந்தனக் கடத்தல் வீரப்பன், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேசட்டில் கோரிக்கை வைத்தால், கருணாநிதியின் நிலை ...?
ப: கருணாநிதி கவலைப்பட மாட்டார். இது அண்ணா ஆட்சி, காமராஜ் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, சந்தன வீரப்பன் ஆட்சி என்று கூறிவிடுவார்.
வீரப்பனையும் திருப்தி செய்த மாதிரி இருக்கும்; மறைந்தவர்களை கவுரவப்படுத்திய மாதிரியும் இருக்கும்.
கே: விநாயகர் ஊர்வலத்தை ஆண்டுதோறும், இந்து முன்னணி பிரச்சனை ஆக்குகிறதே? தேவைதானா?
ப: இந்து முன்னணிக்கு தேவைதான்; இந்துக்களுக்குத் தேவை இல்லை.
கே: போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்காததை கண்டித்து தேர்தல் கமிஷன், தமிழக அரசைக் குட்டியுள்ளதே ...?
ப: இந்த விஷயத்தில் தமிழக அரசின் மெத்தனம், கண்டனத்துக்குரியது. கடைசியில்,ரேஷன் கார்டை காட்டினால் போதும் என்பார்கள்.
போலி ரேஷன் கார்டுகளோ, ஏற்கனவே புகழ் பெற்றவை. இப்போது இன்னமும் அதுமாதிரி கார்டுகளை நிறைய அச்சடித்துக் கொள்ளலாம். வேறுகுறையே இல்லை. கள்ள ஓட்டு, வெள்ளமெனப் பாயும்.
கே: பெரியார் விழாவுக்கு காங்கிரஸ் கட்சியை அழைக்காததால், ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக காங்கிரசே போட்டிக்கு பெரியார் விழா நடத்தமுடிவு செய்துள்ளது பற்றி...?
ப: சசிகலா பிறந்த நாள் விழாவுக்கு, காங்கிரசை ஜெயலலிதா அழைக்கவில்லை என்றால் - காங்கிரசே சசிகலா பிறந்த நாள் விழாவைக்கொண்டாடும் போலிருக்கிதே! காங்கிரசின் வேகம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது !
கே: பெரியார் விழாவுக்கு தலைமை ஏற்க ஜெயலலிதாவுக்கு தகுதி உண்டு -- என தி.க.வின் வீரமணி கூறுவது பற்றி ...?
ப: தவறில்லை. தமிழர்களை முட்டாள்கள் என்று பெரியார் வர்ணித்தார்; ஜெயலலிதாவும் இதைத்தான் நம்புகிறார் என்று வீரமணி நினைப்பதால், இப்படிப்பேசியிருக்கிறார். இப்படி நினைக்க அவருக்கு உரிமை இல்லை என்று கூற முடியுமா?
கே: கர்நாடகாவில் கிருஷ்ணாவின் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க மத்தியஅரசும், தமிழக முதல்வரும் சேர்ந்து செய்த சதிதான் நடிகர் ராஜ்குமார் கடத்தல்விவகாரம் என்று பரவலாகப் பேசப்படுகிறதே?
ப: ஜெயலலிதா கூட இதை நம்பமாட்டார்.
கே: நிர்ணயித்த கட்டணத்தை தராததால், கோவை தொடர் குண்டு வெடிப்பு மற்றும் உடுமலை குண்டு வெடிப்பு போன்ற வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகஎனக்கு விருப்பமில்லை - என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் சவுந்தரராஜன் கூறியுள்ளது பற்றி ...?
ப: பொதுவாக ஒரு விஷயம். எதிர்தரப்பு வக்கீல்கள் பெறுகிற ஃபீசுடன் ஒப்பிடும் போது, அரசு தரப்பு வக்கீல்களுக்கு மிகக் குறைவான ஊதியமேதரப்படுகிறது.
இதனால் அரசு தரப்புக்கு நல்ல வக்கீல்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உண்டு. எதிர் தரப்பு வக்கீல்களின் ஊதியம் அளவுக்கு இல்லாவிட்டாலும்,அரசு வக்கீல்களுக்கு கணிசமான ஃபீஸ் தர அரசு முன் வர வேண்டும்,
கே: இரு மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டால், நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க உதவி செய்ய மத்திய அரசு தயார் என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடு கூறியுள்ளாரே ...?
ப: என்ன திட்டமாக இருக்கும்? ஒரு வேளை, கோவிந்தாச்சார்யாவை மத்திய அரசு தூதராக வீரப்பனிடம் அனுப்பி விட்டால் - நிம்மதியாகஇருக்கும் என்று கணக்கிடுகிறார்களா? சே, சே இருக்காது. உட்கட்சி பூசல் பா.ஜ.க.வில் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை.
கே: தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் குஜ்ரால் வற்புறுத்தியதாக முன்னாள் சி.பி.ஐ.இயக்குநர் ஜோகிந்தர் சிங் புகார் கூறியுள்ளது பற்றி...?
ப: இதுபற்றி குஜ்ரால் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். ஜோகிந்தர் சிங் கொஞ்சம் நாடகப் பிரியராக இருந்து வந்திருக்கிறார். அதனால் கற்பனை வளம் அவரிடம் உண்டு. இப்போது அவர் கூறியுள்ளதில் கற்பனை உண்டா இல்லையா என்பது தெரியாமல், நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது.
கே; மேற்கு வங்கத்தில் பீகாரை விட - சட்டம் - ஒழங்கு மோசமடைந்து விட்டதாக, ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளது குறித்து ...?
ப: இதனால் மட்டும் மம்தா பானர்ஜி திருப்தி அடைந்து விடுவாரா?
கே: ஆந்திராவில் 12 லாக்கர்களில் ஒன்றரை கோடி ரூபாய் லஞ்சமாகப் பெற்ற பணத்தை, மறைத்து வைத்த அரசு அதிகாரி கைது செய்யப்பட்டது பற்றி...?
ப: அதிகாரிகள் எதையும் ஒழுங்காகச் செய்வதில்லை என்பது இப்போது புரிகிறதா?
கே: திராவிட பாரம்பரியம் இப்போது எப்படி இருக்கிறது?
ப: சந்தனப் போராளி வீரப்பனுடன் சேர்ந்து கொண்டு, தமிழ் தீவிரவாதம் என்ற திருநாமத்துடன், காட்டில் இருக்கிறது.
கே: ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார்கள் ; அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிறார்கள் ; ஆனால் மக்களுக்கு சேவை செய்வதில் பங்கு வேண்டும் என்ற நினைப்புக் கூட யாருக்கும் இல்லையே ...?
ப: பங்கு சந்தையில் நுழைந்து, சில பங்குகளை வாங்குவதில் பலருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும் ; அதற்காக, அவர்களைப் பார்த்து, சமூக சேவை சங்கத்தில்பங்கு வாங்க வேண்டும் என்று சொல்ல முடியுமா? அதில் பங்கு விற்பனை கிடையாதே.
கே: நடிகர் ராஜ்குமார் கடத்தலில் வில்லன் ரோல் வீரப்பனுடையது என்றால், காமெடி ரோல் யாருடையது?
ப: கவுண்டமணி, செந்தில் போல கிருஷ்ணா, கருணாநிதி - என்று உங்களுக்குத் தோன்றினால் அதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே! என் மீதுஏன் அந்த வேலையைச் சுமத்துகிறீர்கள்!












Click it and Unblock the Notifications