Gold Rate Today: வாரத்தின் முதல் நாளிலேயே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்.. மக்களே கவனம்!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே கேப் விடாமல் தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இப்போது சரிய ஆரம்பித்துள்ளது. சர்வதேச அரசியல், அமெரிக்க வட்டி விகிதம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறைகிறது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை குறைவதால் இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்தே வருகிறது.
சர்வதேச சந்தையில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,150 டாலர் என்ற ரேஞ்சில் வர்த்தகமாகிறது. இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் பல பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் ஒளிந்துள்ளன.

சர்வதேச மார்கெட்
உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் கூட தங்கத்தின் மீதான தனது கணிப்பை அதிரடியாகக் குறைத்துள்ளது. முன்னதாக தங்கம் 5,400 டாலரை எட்டும் என்று கணித்திருந்த அந்த நிறுவனம், தற்போது அதை 4,900 டாலராகக் குறைத்துள்ளது. முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்திலிருந்து தங்கள் முதலீடுகளை வெளியே எடுப்பதும், உலகளவில் வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்பும்தான் இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
காரணம்
அரசியல் ரீதியாகப் பார்த்தால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உலக நாடுகளிடையே நிலவிய பதற்றத்தைத் தணித்துள்ளது. பொதுவாகப் போர் அல்லது அரசியல் குழப்பங்கள் நிலவும்போதுதான் மக்கள் தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். தற்போது பதற்றம் குறைந்துள்ளதால், தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து, கச்சா எண்ணெய் விலையும் சரிவைக் கண்டுள்ளது.
மற்றொரு முக்கிய காரணம் அமெரிக்காவின் வட்டி விகிதக் கொள்கை ஆகும். இதற்கு முன்பு வரை அமெரிக்க வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தை விட, பாண்டுகள் போன்ற மற்ற முதலீடுகள் லாபகரமாகத் தெரியும். மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைவதால், சர்வதேச சந்தையில் தங்கம் வாங்குவதற்கான செலவு அதிகரித்து அதன் தேவையைக் குறைக்கிறது.
தற்காலிகமானது?
இருப்பினும், இந்தச் சரிவு தற்காலிகமானது என்று பார்க்லேஸ் போன்ற சில நிறுவனங்கள் கருதுகின்றன. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை அதிகளவில் வாங்கி வருவதால் நீண்ட கால நோக்கில் தங்கம் மீண்டும் உயரும் என்றே தெரிகிறது.. எனவே, தற்போதைய சூழலில் அமெரிக்காவின் பொருளாதார முடிவுகளையும், உலக நாடுகளின் உறவுகளையும் உன்னிப்பாகக் கவனிப்பது அவசியமாகும்.
தங்கம்
சனிக்கிழமை தங்கம் விலை சற்றே உயர்ந்தது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனையானது. அதேபோல தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கு விற்பனையானது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
திங்கள்கிழமையான இன்றும் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்
22.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
21.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
20.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,800
19.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,560
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,11,600 (மாலை)
18.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480 (காலை)
17.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,240
16.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,480
15.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560












Click it and Unblock the Notifications