3-வது அணி நிச்சயம் உருவாகும் .. ராமதாஸ்
நாகர்கோவில்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு மூன்றாவது அணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்டாக்டர் ராமதாஸ் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஜாதி இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் பலம் பெற்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், வேலை போன்ற நிலையைமேம்படுத்துவதற்காகவே ஜாதி அமைப்புக்கள் உருவாகின்றன. அவர்கள் அரசியலில் உரிமை கேட்பதில் தவறேதுமில்லை.
தமிழகத்தில் ஜாதி இயக்கங்களால் மாற்றமேதும் வந்துவிடப்போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார். அது அவரது சொந்தக் கருத்து. வரும்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை இப்போது கூற முடியாது.
மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. கூட்டணி இல்லை என்று ஜெயலலிதாவும்,த.மா.கா.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கருணாநிதியும் கூறிவிட்டனர். இந்த நிலையில் மூன்றாவது அணி அமைப்பதைத் தவிரமூப்பனாருக்கு வேறு வழியில்லை.
வரும் பொதுத்தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் மூன்றாவது அணி உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் ராமதாஸ்.