மாணவிகள் கொலை வழக்கு: மேலும் 2 அதிமுகவினர் விடுதலை
சென்னை:
தர்மபுரியில் பஸ்சோடு சேர்த்து 3 மாணவிகள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுகவினர் இருவரை தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைஎதிர்த்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது.
அப்போது தர்மபுரியில் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. அதிமுகவினர் தான் தீவைத்ததாக புகார் கூறப்பட்டது. இதில் மூன்று மாணவிகள் உயிரோடு கருகி இறந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அதிமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் நெடுஞ்செழியன், முனியப்பன் ஆகிய இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுதலை செய்யவேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பஸ் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பின்பு, இரு மாதங்கள் கழித்து காலதாமதமாக தேசிய பாதுகாப்புசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது தவறு என்றும், பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அரசுக்கு அப்பீல் செய்யவழிவகை உள்ளது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் அவர்கள் குறுப்பிட்டுள்ளனர்.
நீதிபதிகள் பத்மநாபன், தங்கவேல் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, இருவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறினர்.
ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவீந்திரன் என்பவரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.