இந்திய ஹாக்கி அணிக்கு அடி மேல் அடி
சிட்னி:
இந்திய ஹாக்கி அணிக்கு அடி மேல் அடி கிடைத்தது. இங்கிலாந்துடன் வியாழக்கிழமை நடந்த போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியாதோல்வியுற்றது. மேலும், சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இழந்தது.
7 அல்லது 8-வது இடத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவை சந்திக்கவுள்ளது இந்தியா. இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வியுற்றதன் மூலம்பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் தகுதியையும் இந்தியா இழந்துள்ளது.
ஒலிம்பிக்கில் முதல் ஆறு இடங்களில் வரும் அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள முடியும்.
கடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் இங்கிலாந்துடனான போட்டியில் இந்தியா தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சியோல் போட்டியில் 0-3 என்றகோல் கணக்கிலும், பார்சிலோனாவில் 1-3 என்ற கணக்கிலும், அட்லாண்டாவில் 3-4 என்ற கோல் கணக்கிலும் இந்தியா தோற்றுள்ளது.
வியாழக்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்துத் தரப்பில் கிரேக் பர்ஹாம், காலம் கைல்ஸ் ஆகியோர் கோல்கள் போட்டனர். இந்தியா சார்பிலதிலீப் திர்கே கோல் போட்டார்.
இந்திய கேப்டன் ரமந்தீப் சிங் விளையாடவில்லை. அவருக்குப் பதில் தன்ராஜ் பிள்ளை கேப்டனாக இருந்தார். இந்திய தரப்பில் எந்த திட்டமும் இல்லாதஆட்டம் இருந்தது இப்போட்டியில் வெளிப்பட்டது. குத்துமதிப்பாக அவர்கள் விளையாடினர். அவரவர் இஷ்டத்திற்கு விளையாடினர்.
பார்வர்ட் வீரர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை. நடுகள வீரர்களும் சேர்ந்து விளையாடவில்லை. தடுப்பாட்டக்காரர்கள் மட்டும் ஓரளவு விளையாடினர்.ஆனால் அவர்களுக்கு அதிக பிரஷர் இருந்ததால், அவர்களாலும் சிறப்பாக விளையாட முடியவில்லை.
முன்னதாக முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியா தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
8 முறை தொடர்ந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ள இந்தியா இப்போது 7-வது அல்லது 8-வது இடத்திற்கு மோதுவது வருத்தமானவிஷயம்தான்.