தூத்துக்குடியில் 4 இலங்கை மீனவர்கள் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 இலங்கை மீனவர்களை மத்திய கடலோரப் பாதுகாப்புப் பட வீரர்கள் கைது செய்தனர்.
சம்பவத்தன்று மன்னார் வளைகுடா பகுதியில், கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்கள் கப்பலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாம்பன்நகருக்குத் தெற்கே 37 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகை கடலோர பாதுகாப்புப் படை வீரர்கள், நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் மால்கன் நிக்கோலஸ் (32), பீட்டர்பர்னான்டோ (42), ஜோசப் மார்டின் (55), ஜெயந்த் டெல்சில் (40) ஆகிய 4 பேரும் இலங்கை கல்பாட்டியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியகடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் மீன்பிடிப்பதற்கான அனுமதியோ, அடையாள அட்டையோ இல்லை.
நான்கு பேரும் கைது செய்து தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர்.