போராட்டக களத்தில் குதிக்கிறது புரட்சிதலைவர் அதிமுக
சென்னை:
பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சார்பில் சென்னையில் வரும் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உலகச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்வால் இந்திய அரசுக்கு கூடுதலாக ரூ. 15,000 கோடி கிடைத்துள்ளது.
இறக்குமதி மற்றும் விற்பனை வரி மூலமாக ரூ.27,000 கோடி வருமானத்தை மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால் அதை விட அதிகமாக ரூ.42ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
கூடுதலாகக் கிடைத்த ரூ.15 ஆயிரம் கோடியை வைத்து நிதியமைச்சர் தனது பற்றாக்குறையை சரி செய்து கொண்டார். பெட்ரோலியத் துறைக்கு அந்தபதினைந்தாயிரம் கோடியை தந்திருந்தால் விலை உயர்வுக்கு வழி ஏற்பட்டிருக்காது.
உலக நாடுகள், பெட்ரோலியத்தின் மீதான வரியைக் குறைத்து சர்வதேச விலை உயர்வைச் சரி கட்டும் பொழுது இந்தியா மட்டும் விலையை உயர்த்தியுள்ளதுகண்டிக்கத்தக்கது.
இதனால் மக்கள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். இந்திய தொழில் வளர்ச்சியும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லா தரப்பு மக்களும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இதைக் கண்டித்து, வரும் 5-ம் தேதி சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் முன்பு புரட்சித் தலைவர் அ.தி.மு.க. பெரும்போராட்டத்தை நடத்த உள்ளது.
இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர் ராஜாராம், இணைப் பொதுச்செயலாளர் பண்ரூட்டி ராமச்சந்திரன், எஸ்.டி.எஸ். மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொள்கின்றனர் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.