மே. இ. தீவுகளை108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
நைரோபி:
மேற்கிந்தியத் தீவுகளுக்கான எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 108 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் போட்டித் தொடர் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வருகிறது.
இப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இலங்கைக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜெயசூர்யாவும் குணவர்தனேவும் களமிறங்கினர்.
அதிரடி ஆட்டம் மூலம் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெயசூர்யா 2 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஆட வந்த அட்டபட்டும் 2 ரன்களில் அவுட்டானார்.
10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தவித்தது. ஆனால் அடுத்து ஆட வந்த துணை கேப்டன் மஹில ஜெயவர்தனேவும், குணவர்தனேவும் நின்று ஆடி ரன்கள் குவித்தனர்.
இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தனர். 72 ரன்கள் எடுத்த நிலையில் ஜெயவர்தனே ஆட்டமிழந்தார். குணவர்தனே 132 ரன்கள் குவித்தார். ரஸ்ஸல் அர்னால்டு தனது பங்குக்கு 41 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மெக்லீன், தில்லான் இருவரும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது ஆட்டத்தைத் தொடங்கியது.
இலங்கை பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் குவிக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், தொடர் இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
இதனால் 85 ரன்களுக்கு 6 விதகெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
இந் நிலையில், வில்லியம்ஸும் நாகமூட்டும் நின்று ஆடி ரன்கள் குவித்தனர். ஆனால், அவர்களும் நீண்ட நேரம் நிற்கவில்லை. இருப்பினும் இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தனர்.
கடைசியில் 46.4 ஓவரில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் இழந்தது. இதனால், இலங்கை 108 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 10 ஓவரில் 9 ரன்களையே விட்டுக் கொடுத்தார். இதில் 4 ஓவர்கள் மெய்டன்களாகும்.
ஸோய்ஸா 3 விக்கெட்டுகளையும் விக்ரமசிங்கே, ஜெயசூர்யா இருவரும் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சிறப்பாக ஆடி சதமடித்த இலங்கை வீரர் குணவர்தனே ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இத் தோல்வியை அடுத்து போட்டியிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் விலகியது. இலங்கை அடுத்து 8-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.
வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.
ஸ்கோர்:
இலங்கை - 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள்.
மே.இ. தீவுகள் - 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள்.