காளிமுத்து அறிக்கை: "நோ கமெண்ட்ஸ் .. இளங்கோவன்
சென்னை:
காளிமுத்து அறிக்கை பற்றி கருத்து சொல்ல தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மறுத்துள்ளார்.
வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக, தமிழக முதல்வர்களை கடுமையாக தாக்கி அதிமுக தலைவி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். கர்நாடகமுதல்வர் காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் விமர்சனத்திற்கு இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அதிமுக - காங்கிரஸ்மோதல் உதயமானது.
அசிங்கமான முறையில் அர்ச்சித்துக் கொண்ட இரு கட்சிகளும், இப்போது கொஞ்ச நாளாக அடக்க, ஒடுக்கமாக நடந்து கொண்டன. என்ன காரணம்என்று இளங்கோவனிடம் நிருபர்கள் கேட்டபோது, "ஜெயலலிதா தனது நிலையை மாற்றி, கர்நாடக காங்கிரஸ் அரசை பாராட்டி பேசியுள்ளார். எனவேநானும் எனது நிலையை மாற்றிக் கொண்டேன் என்பதாக தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை இளங்கோவன் போகும் இடமெல்லாம் தெரிவிக்கவே, மறுபடியும் சூடானது அதிமுக தலைமை. மீண்டும் காளிமுத்து பெயரில் ஒரு அறிக்கைபாய்ந்து வந்தது. வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக - தமிழக முதல்வர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியல்ல என்பது தான் ஜெயலலிதாவின் நிலை.அதை அவர் ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை என்று அறிக்கை மூலம் இளங்கோவன் மூக்கை அறுத்தனர்.
ஆனால், அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை அவர். சென்னையில் திங்கள் கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது, காளிமுத்துவின் லேட்டஸ்ட்அறிக்கை பற்றி கருத்து கேட்டபோது, "நோ கமெண்ட்ஸ் என்று நழுவிக் கொண்டார் இளங்கோவன்.
ஜெயலலிதா ஒரு அறிக்கையில், வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக அரசு பதைபதைப்போடு செயல்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு என்னஅர்த்தம்? என்று திரும்பக் கேட்டார் இளங்கோவன். காளிமுத்து தான் பதில் சொல்ல வேண்டும்.