சோகத்தில் மூழ்கியது சி.எஸ்சின் கிராமம்
கோவை:
பாரத ரத்னா சி. சுப்ரமணியத்தின் மறைவினால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. மறைந்த தலைவருக்கு இந்த கிராமம் தனதுமலரஞ்சலியைச் செலுத்தியது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுப் பாளையத்தில் 1910ம் ஆண்டு சி. சுப்ரமணியம் பிறந்தார். அவர் இங்குள்ள திண்ணைப் பள்ளியில்தனது கல்வியைத் துவங்கினார்.
பினனர் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போதே அரசியலில் ஆர்வமுடன் செயல்பட்டார்.பின்னர் ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் பங்கேற்றார்.
மத்திய விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்று நிதியமைச்சர் பதவி வரை 8 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தார்.
பசுமைப் புரட்சிக்கு காரணமாக அமைந்த இவரது சாதனைகளை எண்ணி இவரது கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சி. சுப்ரமணியம் மறைவால் சோகத்தில் ஆழ்ந்த இவரது கிராமத்தில், இவரது படம் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டன. பின்னர் கிராமமக்கள் ஒன்று கூடி சொந்த மண்ணில் அஞ்சலி செலுத்தினர்.
சி. சுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் சென்னைக்குச் சென்று அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
தனது சொந்த முயற்சியால் செங்குட்டுப் பாளையத்தில், சுப்ரமணியம், சுவாமி சத்பவனந்தா பள்ளியை உருவாக்கினார்.
இந்தப் பள்ளியில் விடுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று அவரது படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.