குடும்பத்தை விட கட்சிதான் பெரிது .. கருணாநிதி
சென்னை:
என் குடும்பத்தை விட எனக்கு கட்சி தான் பெரியது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் திங்கள்கிழமை துணை நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக மதுரையில் நடந்த சம்பவம் பற்றி இங்கே பேசப்பட்டது. மதுரையில் நடந்தது கட்சி சண்டை அல்ல. குடும்பச்சண்டை என்றும் சொன்னார்கள்.
எல்லா கட்சிகளிலும் குடும்பச் சண்டை இருக்கிறது. எந்த கட்சியில் குடும்பச் சண்டை இல்லை? சொல்லுங்கள் பார்க்கலாம். தேசிய கட்சியிலும்இருக்கிறது. மாநிலக் கட்சியிலும் இருக்கிறது இந்தப் பிரச்சனை. எனவே திமுக விவகாரத்தை மட்டும் பூதக் கண்ணாடி போட்டு பார்க்காதீர்கள்என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதற்காக, நான் குடும்பத்திற்காக வக்காலத்து வாங்குகிறேன் என்று யாரும் கருதிட வேண்டாம். என்னிடம் குடும்பம் பெரிதா அல்லது கட்சி பெரிதாஎன்று கேட்டால், கட்சிதான் பெரிது என்பேன். அதனால் தான் மதுரையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து 8 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications