உருவானது 100-வது உழவர் சந்தை
சென்னை:
சென்னை பல்லாவரத்தில் 100 வது உழவர் சந்தையை முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.
காய்கறிகள், பழங்கள் முதலான வேளாண் விளைப்பொருட்களை இடைத் தரகர்கள், வணிகர்கள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் உழவர்கள் நேரிடையாகமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் கருணாநிதி இந்தப் புதிய திட்டம் குறித்து அறிவித்தார். மாநிலத்தில் உள்ள நகர்புறங்களில் பலஇடங்களில் உழவர் சந்தைகள் நிறுவப்படும் என்றும் கருணாநிதி கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரையில் முதல் அமைச்சர் கருணாநிதி தொடங்கி, வைத்தார்.அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மளமளவென உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
இதுவரை 99 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த 99 உழவர் சந்தைகளில் இதுவரை 16 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 963 கிலோகாய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை விற்பனை ஆகியுள்ள காய்கறிகளின் விலை மதிப்பு 112 கோடியே 85 லட்சத்து 35 ஆயிரத்து 326 ரூபாயாகும். 13.5 லட்சம் விவசாயிகள் தங்கள்விளைபொருட்களை யார் குறுக்கீடும் இல்லாமல் 99 உழவர் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்றுள்ளனர்.
மற்ற இடங்களை விட உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் மக்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைத்தது. இதுவரை சுமார் 5 கோடி பேர்உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு இதே தினத்தன்று முதல் உழவர் சந்தையை தொடங்கி வைத்தபோது. ஓராண்டுக்குள் 100 உழவர் சந்தைகள்திறக்கப்படும் என்று கூறி இருந்தார்.
அவர் அறிவித்தபடி, செவ்வாய்க்கிழமை சென்னை பல்லாவரத்தில் தமிழகத்தின் 100 வது உழவர் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
முதல் அமைச்சர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை காலை 100 வது உழவர் சந்தையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் காய்கறிவிற்பனையையும் தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி,சுந்தரம், சண்முகம் எம்எல்ஏ மற்றும் பலர் விழாவில் பேசினார்கள்.