பேசினார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலை தேறி வருகிறது.
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு கடந்த 28 ம் தேதி மைக்ரேயின் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அவருக்கு இதயத்தில் இடது புற வென்டிரிக்கிள் சரியாக இயங்கவில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டது. இதை சரி செய்வதற்காக ஆல்ஹால் அப்லேசன் என்றநவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் லண்டனைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் உல்ரிச் சிக்வார்ட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் ஹோர்ஸ்ட்ஹோன் ஆகியோர் நவீன முறைப்படி சிகிச்சை அளித்து விட்டுச் சென்றனர்.
மாறனின் உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம்அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கருவிகள் மூலம் உடல் கண்காணிக்கப்பட்டு வருவதால் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார்என்றனர்.
இதற்கிடையே, திங்கள் கிழமை காலை அவரைப் பரிசோதித்த டாக்டர்களிடம் சைகை மூலம் அவர் பேசினார். முதலில் மாமா எங்கே என்று முதல்வர்கருணாநிதி குறித்துக் கேட்டார். அவர் சட்டசபைக்குப் போயிருக்கிறார் என்று கூறியதும், மாறன் சமாதானமடைந்தார்.
பின்னர் மாலை அவரது பேத்தி காவியாவைப் பற்றிப் பேசத் தொடங்கினார். அவர் அதிகம் பேசக் கூடாது என்பதால் டாக்டர்கள் அவரைப் பேசவிடவில்லை. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தாலும் அவருக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசமே அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் பார்த்தார்:
பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மாறனைப் பார்த்த முதல்வர் கருணாநிதி மீண்டும் மாலை 6.30 மணிக்கு வந்து மாறனைப் பார்த்தார்.அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும் அங்கு வந்து மாறனின் உடல்நிலை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, தமிழ்க்குடிமகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், கவிஞர் வைரமுத்து மற்றும்பலர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து மாறனின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications