புளோரிடா: தேர்தல் முடிவை அறிவிக்கத் தடை
வாஷிங்டன்:
புளோரிடாவில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க புளோரிடா உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக இந்த தேர்தல் முடிவு சனிக்கிழமை பிற்பகலில் அறிவிக்கப்படுவதாக இருந்தது. எந்திரங்களால் முதலில் நடத்தப்பட்டவாக்கு எண்ணிக்கையின்படி புளோரிடாவில் ஜார்ஜ் புஷ் சுமார் 760 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.
ஆனால், 3 கவுண்டிகளில் வாக்குகள் கையால் எண்ணப்பட்டு வந்தன. கையால் எண்ணப்படும் வாக்கு எண்ணிக்கையை ஏற்கமுடியாது என புளோரிடா மாகாண செயலாளர் அறிவித்துவிட்டார்.
இதை எதிர்த்து அல்கோரின் ஜனநாயகக் கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்னும்முடியவில்லை. இதையடுத்து முதலில் இயந்திரங்கள் மூலம் எண்ணப்பட்ட வாக்குகளை வைத்து தேர்தல் முடிவை அறிவிப்பதாகஇருந்த புளோரிடா மாகாண செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியும். இந் நிலையில் மிக ஆர்வமாகஎதிர்பார்க்கப்பட்ட தபால் ஓட்டுகளும் வந்து சேர்ந்துவிட்டன. அவையும் எண்ணப்பட்டு வருகின்றன.
3 கவுண்டிகளில் கைகளால் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் அல்கோருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.அவருக்கும் புஷ்சுக்கும் இடையே இருந்த அதிக பட்ச வித்தியாசம் வெறும் 300 ஆகக் குறைந்துவிட்டது.
இதனால் புளோரிடா முழுவதுமே மீண்டும் கைகளால் ஒருமுறை வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என அல்கோர் கூறி வருகிறார்.மேலும் பாம் பீச் கவுண்டியில் வாக்குச் சீட்டில் குழப்பம் இருந்ததால் மீண்டும் தேர்தல் கூட நடத்தலாம் என ஜனநாயகக் கட்சிசார்பில் அல்கோர் ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால், இதை ஏற்க ஜார்ஜ் புஷ்சும், புளோரிடா மாகாண நிர்வாகமும் மறுத்து வருகின்றன. கீழ்நிலை நீதிமன்றத்தில்வழங்கப்பட்ட தீர்ப்பில், கைகளால் எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடியும் வரை காத்திருக்கவேண்டியதில்லை. முதலில் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையை வைத்தே தேர்தல் முடிவை அறிவித்துவிடலாம் என தீர்ப்பில்கூறப்பட்டது.
இதை எதிர்த்து அல்கோர் ஆதரவாளர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினர். இதில் தேர்தல் முடிவை அறிவிக்க தடைவழங்கப்பட்டுள்ளது. இதனால் அல்கோருக்கு மீண்டும் கொஞ்சம் நம்பிக்கை கிடைத்துள்ளது. இப்போது இந்த விவகாரம் முழுக்கமுழுக்க நீதிமன்றத்தின் முடிவில் தான் உள்ளது.
அதே போல புளோரிடாவில் சில கவுண்டிகளில் கைகளால் வாக்கு எண்ணப்படுவதைத் தடுக்கக் கோரி ஜார்ஜ் புஷ்சின் குடியரசுக்கட்சி தாக்கல் செய்த மனுவை அட்லாண்டா சர்க்யூட் நீதிமன்றம் தளளுபடி செய்துவிட்டது.
புளோரிடா மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி புஷ் கட்சி அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும்தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால், புஷ் கட்சியினர் சோகத்தில் உள்ளனர்.
பாம் பீச். மியாமி டாடி, புரோவர்ட் கவுணடிகளில் நடத்தப்பட்டு வந்த கைளால் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை புஷ்கட்சியினரின் வழக்குகளால் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது இந்த வாக்கு எண்ணிக்கை மீண்டும் சனிக்கிழமை பிற்பகலில்துவங்குகின்றன. இவற்றை எண்ணி முடிக்க 7 நாட்களாகும்.