வெற்றியுடன் திரும்புவோம்.. எஸ்.பி. சைலேந்திரபாபு
சென்னை:
காட்டுக்குள் பதுங்கியிருக்கும் சந்தனக் கடத்தல் வீரப்பனை எப்பாடு பட்டாவது பிடித்து வெற்றியுடன் திரும்புவோம் என்று அதிரடிப்படையில் இடம்பெற்றுள்ள போலீஸ் எஸ்.பி. சைலேந்திர பாபு திங்கள்கிழமை தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் மாயாவி வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை மீண்டும் தொடங்கி விட்டதாக முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமைஅறிவித்தார்.
ஐ.ஜி.பாலச்சந்திரன் தலைமையில், ஏற்கனவே சுமார் 350 அதிரடிப்படை வீரர்கள் வீரப்பன் மறைந்துள்ள காட்டில் முகாமிட்டுள்ளனர்.
இப்போது, அதிரடிப்படையில் புதிதாக டிஐஜி தமிழ்செல்வன், கண்காணிப்பாளர்கள் சைலேந்திரபாபு, பெரியய்யா, அசோக்குமார் தாஸ் ஆகியோரும்நியமிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
வீரப்பன் பிடிக்கும் அதிரடிப்படையில் இடம் பெற்றுள்ள சைலேந்திரபாபு தற்போது சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனராக இருக்கிறார். இவர்கோபிச்செட்டிப் பாளையத்தில் 89 ம் ஆண்டிலிருந்து 91 ம் ஆண்டு வரை ஏ.எஸ்.பி. யாக பணிபுரிந்தார்.
அப்போது பிரபலமாகாமல், சாதாரண சந்தன மரக் கடத்தல்காரனாக இருந்த வீரப்பன், இவரிடம் பலமுறை சிக்கி, தப்பியிருக்கிறார். இவர் 4 முறைநேருக்கு நேர் நின்று, வீரப்பனுடன் துப்பாக்கிச் சண்டை போட்டிருக்கிறார். வீரப்பனின் கூட்டாளிகள் 2 பேரை சுட்டு வீழ்த்தியிருக்கிறார். வீரப்பனின்கூட்டாளிகள் கெம்பன் உள்பட 20 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளார்.
வீரப்பனைப் பிடிக்கும் அதிரடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து சைலேந்திரபாபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல் அமைச்சருக்கும்,அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், வீரப்பனை கண்டிப்பாக பிடித்து, வெற்றியுடன் திரும்புவோம் என்றும் சைலேந்திரபாபு திங்கள்கிழமை நிருபர்களிடம்தெரிவித்தார்.
சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை வீரப்பனைப் பிடிக்கும் பணிக்காக, சென்னையிலிருந்து சத்யமங்கலம் காட்டுப் பகுதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையில் ஏற்கனவே பெரியய்யா இடம் பெற்றுள்ளார்.
கண்காணிப்பாளர் அசோக்குமார் தாஸ் தற்போது ஈரோடு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக உள்ளார். இவரும் வீரப்பனை பிடிக்கும்அதிரடிப்படையுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.